2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உணவு உற்பத்திப் புரட்சியின் வட மாகாண திட்டம் ஆரம்பம்

Editorial   / 2017 ஒக்டோபர் 14 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

“விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்” தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (14) ஆரம்பமானது.

புத்தூர், நிலாவரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் பழ மரக்கன்றுகள், உணவுப் பயிர் கன்றுகளை ஜனாதிபதி விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

உணவுப் பயிர்களை நாட்டுகின்ற முறையை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், “சிதமு கான்தா” விவசாய அமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 4,000 பெண்களுக்கு உணவுப் பயிர் விதைகளை வழங்கி வைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

விவசாயத்துறை அமைச்சால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயக் கிணறுகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் நிதிக்கான காசோலையையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

விவசாயத்துறைக்கு குறைந்த செலவில் சூரிய சக்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், வாழைக்குலைகளை வெட்டும் நவீன இயந்திரமொன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார். நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய சமூகத்தினருடன் ஜனாதிபதி சுமுகமாகக் கலந்துரையாடினார்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் கந்தையா சிவநேசன், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர் சிவகுமார், யாழ். மாவட்ட அதிபர் என். வேதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .