2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘காஜா’ புயலால் 2,793 பேர் பாதிப்பு

Editorial   / 2018 நவம்பர் 17 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ‘காஜா' புயலின் தாக்கம் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை உண்டாக்காத போதும், மாவட்டத்தில் 770 குடும்பங்களை சேர்ந்த 2,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் பூரணமாக சேதமடைந்துள்ளதுடன், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும், 2 பாதுகாப்பான அமைவிடங்களில் 14 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

‘காஜா' புயல் இலங்யையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையில், வடமாகாணம் முழுவதும் பாரியளவு தாக்கத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வடமாகாண மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு பாதுகாப்பு ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை 9 மணிக்கு பின்னராக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலமான காற்று வீசியதுடன், கனமழையும் பெய்தது. இதேபோல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் பலமான காற்று வீசியதுடன் மழையும் பெய்துள்ளது.

இதனால் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 4 மீற்றர் உயரமான அலைகள் எழுந்ததைக் காணக்கூடியதாக இருந்தாக மக்கள் கூறுகின்றனர். இதேபோல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சில இடங்களில் பாரிய மரங்கள் காற்றால் முறிந்து விழுந்துள்ளது.

குறிப்பாக அச்சுவேலி, நவாலி போன்ற பகுதிகளில் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. மேலும், நேற்றிரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. எனினும், சில மணி நேரங்களில் மின்சாரம் மீண்டும் வந்தபோதும் சில இடங்களில் மின்சாரம் பகல்வேளையிலும் வரவில்லை.

தீவு பகுதிகளுக்கான போக்குவரத்து தடை

காஜா புயல் தாக்கம் காரணமாக யாழ். குடாநாட்டின் தீவு பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதனால் தீவு பகுதிக்கான போக்குவரத்துகள் பூரணமாக முடங்கியது. குறிப்பாக அனலைதீவுக்கான போக்குவரத்து கடந்த 2 நாள்களாக தடைப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறையில் மக்கள் காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

பாதிப்பு

57 சிறு கைதொழில் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. சாவகச்சேரி பிரதேசத்தில் 2 பாதுகாக்கப்பட்ட இடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இங்கு 14 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் தங்கவைக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெல்லிப்பழை, சாவகச்சேரி, கோப்பாய் ஆகிய பகுதிகளில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், எதிர்பார்த்தளவு பாதிப்பு இல்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .