2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

​ ’சமுர்த்தி பயனாளிகள் தொடர்பில் நடவடிக்கை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா இன்று (08) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சென்ற ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சமுர்த்தி பெறுபவர்களின் எண்ணிக்கை கூட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமுர்த்தி உதவி பெறுபவர்கள் தாங்கள் பெறும் சமுர்த்தி உதவிகள், மற்றும் தங்கள் பெயர்கள் வெட்டப்படுகின்றன என முறைப்பாடுகள் செய்கின்றனர்.

குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் முழுமையாக மீள்குடியேற்றங்கள் இடம்பெறவில்லை. உழைக்கும் தகுதியுள்ளவர்களுக்கு உழைக்கும் வாய்ப்புகள் உருவாகவில்லை. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு வாழ்வாதாரம் இல்லை. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கை நடத்திச் செல்லமுடியாமலுள்ளோர் தொகை அதிகரித்துள்ளது.

அத்துடன் சமுர்த்தி உதவி பெறுவதற்கு தகுந்தோரைத் தெரிவதற்கு வகுத்த வரைவிலக்கணம், விதிமுறைகள் வகுக்கப்பட்டுப் பல ஆண்டுகள் கடந்து விட்டன. நிகழ்காலத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் சமுர்த்தி உதவி பெறத் தகுதியுடையோர் பட்டியல் தயாரிக்கும் விதிமுறை மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

இதுவரை காலமும் சமுhத்தி உதவி பெற்றோர் உதவிகள் வெட்டப்படுமாயின் அவர்கள் தாங்கள் வசிக்கின்ற பிரதேச செயலாளர்களிடம் முறையிடுங்கள்.

இதுவரையும் சமுர்த்தி உதவி பெறத் தகுந்தோரும் உரிய சமுர்த்திப் பட்டியலில் பதிவு செய்வதில் தவறுகள் நேர்ந்திருந்தால் அது பற்றியும் பிரதேச செயலாளர்களிடம் முறையிடலாம். இவ் விடயங்களை எதிர்வரும் பிரதேச மட்ட, மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் பொருத்தமான தீர்மானங்களை எடுக்க முடியும்.

இந்த வாரத்தில் நாடாளுமன்றம் நடைபெறுங் காலத்தில் சமுர்த்தி அமைச்சரிடம் பேசி சமுர்த்தி உதவி பெறுவதற்கு தகுந்தவர்கள் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு உதவும் பொருட்டுப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .