2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘சர்வதேச சமூகம் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

நாட்டில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சமூகம், இலங்கை தொடர்பான தமது கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமென, தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, தமிழ் சிவில் சமூக அமையம் இன்று (31) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கடந்த 26ஆம் திகதியன்று ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளானது, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மாற்றத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தால் கட்டமைப்பு சார் மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படாத சூழலில், இன்று சிறுபான்மையினச் சமூகம் கூடுதல் பாதுகாப்பு நெருக்கடிகளை தாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இப்போதாவது, சமூகம் எச்சரித்து வரும் விடயங்கள் மீது, சர்வதேச சமூகம், நேர்மையான கவனத்தைச் செலுத்தி, இலங்கை தொடர்பான தமது கொள்கைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி சூழ்நிலையில், இரண்டு பிரதான கட்சிகளுமே சிங்கள - பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்பவை என்பதில் சந்தேகமில்லையெனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதைத் தீர்மானிக்க முன்பதாக, ஆதரவு வழங்கவிருக்கும் கட்சியிடம் தெளிவாக, பொதுப்பரப்பில், எழுத்து மூலம் வாக்குறுதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .