2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’தலைவர் ஆகுவதற்கு தகுதி வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 29 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் இருவரும், ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றார்கள் எனத் தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க. துளசி, தலைவர் ஆகுவதற்கு தகுதி வேண்டுமெனவும் கூறினார்.

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில், நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழர்கள் இன்று தமது தனித்துவத்தை இழந்து, பயணித்துக் கொண்டிருப்பதாகவும் தற்போது வந்துள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம், தமிழர்களுக்கு ஆற்றியிருக்கின்ற பணிகளின் நிமித்தம், தமிழர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத் தர வேண்டிய கடப்பாடு கோட்டாபய அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உடைக்க வேண்டுமாயின், மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்குவதற்கு சிங்கள தேசம் நினைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதன்பிரகாரம் தான், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியில் வந்து நிற்கின்றாரெனவும் கூறினார்.

“தொடர்ந்தும் தமிழர்கள் தோல்வியடைய முடியாது. நீங்கள் மிகக் கவனமாக முடிவெடுங்கள். நாங்கள் இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள். ஒற்றுமையாக வாக்களியுங்கள்.

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளை மக்கள் ஆணையாக வழங்கியிருந்தார்கள். நாடாளுமன்றத்தில் கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ இருக்கப் போகின்றார். சில சமயம் வெற்றி பெற்றால், உங்களின் கதிரையை வெளியில் கொண்டு வந்தா போட்டுட்டு இருக்கப் போகின்றீர்கள்?” எனவும் வினவினார்.

“தயவு செய்து மக்களை திசை திருப்பி, மக்களின் வாக்குப் பலத்தை திசை திருப்பும் வேலையை நீங்கள் செய்ய வேண்டாம். கடந்த காலங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வழங்கப்பட்ட பணி என்ன?

“வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி இன்று வெளியில் வந்து விடுதலைப் புலிகள் உங்களுடன் இருந்ததாகச் சொல்கின்றீர்கள். நீங்கள் எவற்றைக் கதைத்தீர்கள் என்பது எமக்குத் தெரியும். நாங்கள் உங்களுடன் என்னத்தைக் கதைத்தோம் என்று உங்களுக்கும் தெரியும்” எனவும், துளசி தெரிவித்தார்.

தாங்கள் உங்களுடன் கதைத்திருக்கின்றோம் என்றால், தாங்கள் யுத்தத்தின் இறுதியில் சம்பந்தனுடன் கதைத்திருக்கமாட்டோம் என்று எவ்வாறு சொல்கின்றீர்களென வினவிய அவர், தமிழர்கள் தனித்துவமான இனமெனவும் தமிழர்களுக்கு யார் தலைவராகிறது என்பதே இங்குள்ள பிரச்சினையெனவும் கூறினார்.

“தலைவர் பிரகாரனின் பின்னர், யார் அந்த முடியைச் சூடுவது என்பதே இங்குள்ள பிரச்சினை. ஒரு வருடத்தின் பின்னர், கஜேந்திரகுமார், ‘நான் தான் தலைவர் என்று’ தனது தலையைக் காட்டிவிட்டார். அதற்குத் தகுதி வேண்டும்.

“தலைவர் இரா.சம்பந்தன், அடுத்ததாக நீதியரசராக இருந்த ஒரு மனிதரை நம்பிக்கொண்டு வந்தார். அவர் அப்போது தான், யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அதற்கு முன்னர் கோவில் கும்பிடவந்து போன ஒருவர் தான் சீ.வி.விக்னேஸ்வரன்.

“தம்பி பிரபாகரன் என்றே சொல்வார், சி.வி.விக்னேஸ்வரன். தலைவர் பிரபாகரன் என்று சொல்லமாட்டார். கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் இருவரும் ஒரு நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றார்கள். யார் தலைவர் ஆகுவதென்று ஒரு போட்டி காணப்படுகின்றது.

“தலைவர் ஆகுவதற்கு சில தகுதிகள் உள்ளன. சரியானதொறு காலம் வரும் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விடுதலைப் புலி உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வார்கள். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அதுவரைக்கும், அதற்குப் பின்னரும், தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு பலமடைய வேண்டும்” எனவும், துளசி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .