2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’மாவையையே முதலமைச்சராக நியமிக்க வேண்டும்’

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா

வடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், இது எனது தனிப்பட்ட விருப்பம் எனவும் குறிப்பிட்டார்.

வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் வீட்டில் இன்று (04) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளை கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலின் போது, யாழ். மாவட்ட கிளை கூடி ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது, முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் ஒருவரையே நிறுத்த வேண்டுமென ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

“கட்சி யாப்பின் அடிப்படையிலும், கட்சி அங்கத்துவ அடிப்படையிலும், தமிழரசுக் கட்சியின் சார்பாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். அந்தவகையில், கூட்டமைப்பின் உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

“அத்துடன், இது தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் எனின், மாவை சேனாதிராஜாவையே முதலாவதாக ஆதரிப்பேன் என்று தெரிவித்த அவர், 2013ஆம் ஆண்டு தேர்தலின் போது, மாவை சேனாதிராஜாவின் பெயரையே தான் பரிந்துரைத்ததாகவும், மாவை சேனாதிராஜா தான் எனின் கட்டாயமாக தனது ஆதரவு அவருக்கே கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கட்சியின் தீர்மானம் என்ற ஒன்று இருப்பதால், எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது, கட்சி யாரைத் தீர்மானிக்கின்றதோ அவருக்கு ஆதரவு வழங்கவும், கட்சியின் முடிவுக்கு கட்டுப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .