2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விகாரை அமைப்பு நிறுத்தப்பட்டது

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க. அகரன்

 

வவுனியா மாவட்ட செயலகத்தில், நாளை (19) அடிக்கல் நாட்டப்படவிருந்த மத வழிபாட்டுத்தளம் என்ற தோரணையிலான பௌத்த விகாரை அமைக்கும் பணி, வட மாகாண சபை உறுப்பினர் ப. சத்தியலிங்கத்தின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில், பண்டாரவன்னியன் சிலைக்கு பின்புறமாகவும் செயலகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாகவும் பௌத்த கட்டடக்கலையை பிரதிபலித்து, முப்படையினரின் அனுசரணையில், வழிபாட்டு தளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நாளை (19) அதற்கான அடிக்கல் நாட்டும் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், ஊடகங்கள் வாயிலாக இவ்விடயம் வெளிக்கொணரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம், இவ்விடயம் தொடர்பாக ஊடக அறிக்கையொன்றை முதலில் விடுத்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“மாவட்ட செயலகத்தில் வழிபாட்டு தளம் அமைப்பது தொடர்பாகவும் அது பௌத்த விகாரையெனவும் எனக்கு அறியக்கிடைத்தது. இதன் அடிப்படையில், இதனை நிறுத்துமாறு ஊடக வாயிலாக அறிக்கையை விடுத்திருந்த போதிலும், அதற்கு பின்னரும் இவ்வேலைத்திட்டம் தொடர்வதாக தெரியவந்தது.

“இந்நிலையில், உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் தொடர்புகொள்ள முயற்சித்திருந்தேன். அது பயன் அளிக்காமையால், நேரடியாக வவுனியா மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடினேன்.

“இதன் பிரகாரம், மாவட்ட செயலகத்தில் சர்வமதங்களையும் உள்ளடக்கிய வழிபாட்டு தளமே அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் என்னிடம் தெரிவித்தார். எனினும், தற்போதைய நிலையில் மாவட்ட செயலகத்தில் இவ்வாறான வழிபாட்டு தளத்தின் தேவை குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன். உத்தியோகத்தர்களின் விருப்பத்துக்கு அமையவே. அதனை தான் அமைக்க முயற்சித்ததாக தெரிவித்ததுடன், அனைத்து மதங்களையும் உள்ளடக்கி அதனை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“எனினும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த நான், தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பிரதேசத்தில் சர்ச்சைக்கு மத்தியில் இவ்வாறான வழிபாட்டு தளத்தை அமைப்பதை உடன் நிறுத்தி பிரதேசத்தின் ஒற்றுமைக்கு வழிசமைக்குமாறு கேட்டிருந்ததுடன், அவ்வாறு அமைக்க வேண்டிய தேவையேற்படின் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடுவோம் எனவும் கூறியிருந்தேன்.

“இதன் அடிப்படையில், இவ்வேலைத்திட்டத்தை நிறுத்துவதாக மாவட்ட செயலாளர் உறுதியளித்துள்ளார்” என, சத்தியலிங்கம் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .