2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய அரசு பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்: சி.வி

Menaka Mookandi   / 2015 ஜனவரி 29 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

புதிய அரசாங்கத்தால் வடமாகாணத்தில் தற்போது செய்யப்பட்ட மாற்றங்கள் சிறியளவு மட்டுமே. இன்னும் பாரிய பல மாற்றங்கள் இங்கு செய்யப்பட வேண்டும் என்று யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் மற்றும் அவரது குழுவினருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு முதலமைச்சர் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (29) நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்த ஊடகவியலாளர்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தொடர்ந்து கருத்து கூறிய அவர், 'புதிய அரசாங்க மாற்றத்தின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதையும் வட மாகாணத்தில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு அவர்கள் வருகை தந்தனர். புதிய அரசின் செயற்பாடுகள் பல இடத்தில் நன்மை பயக்கின்றது. குறிப்பாக ஆளுநர், பிரதம செயளாளர் ஆகியவர்களின் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறினேன்' என்றார்.

'இங்கு பாரிய பிரச்சினையான இராணுவ வெளியேற்றம், சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீளக்கையளித்தல் தொடர்பான பாரிய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். வடக்கில் இருந்து இராணுவத்தை குறைப்பதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டினேன்.

இதற்கு அவர்கள், இவற்றை மீளளித்தால், இதனை என்ன செய்வீர்கள் என்று என்னிடம் வினாவினார்கள். மீள்குடியேறாத மக்களின் நிலமைகளையும் அவர்களது சொந்த நிலங்களையே இராணுவத்தினர் சுவீகரித்து முகாம் அமைந்துள்ளனர். என்பதை நான் அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.

இது பாரிய மாற்றதை ஏற்படுத்துமா? என்பது அவர்களது அடுத்த வினாவாக இருந்தது. 99 சதவீதமான தமிழ் பேசும் மக்கள் வடமாகாணத்தல் உள்ளனர். விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு சிங்கள பிரதிநியை அனுப்பும் சூழ்நிலை உருவாகும் என்தை அவர்களுக்கு தெரிவித்தேன். இதன் பின்னரே இதில் இவ்வளவு சிக்கலான பிரச்சினை உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்' என்று அவர் கூறினார்.

'வடமாகாணத்துக்கு கூட்டுறவுத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உதவிகளை வழங்குவது தொடர்பாக தாம் ஆராய்வதாகவும் தெரிவித்தனர். போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்படும் தரவு அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளதாக தெரிவித்தேன். இது பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக' முதலமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .