2025 மே 05, திங்கட்கிழமை

’கொரோனாவுக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கும் என்ன சம்பந்தம்?’

Princiya Dixci   / 2020 நவம்பர் 19 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, வி.சுகிர்தகுமார் 

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் எனக் கூறி, மீள் குடியேற்றங்களை மேற்கொள்கின்றார்கள்; நாடாளுமன்றத்தைக் கூட்டுகின்றனர்; அபிவிருத்தி செய்கின்றனர். ஆனால், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கொரோனா எவ்வாறு தடையாக உள்ளது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கேள்வியெழுப்பினார்.

சமகால அரசியல் தொடர்பில் கல்முனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

இங்கு அவர் கருத்துரைக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலின் போது, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு, தமிழ் பிரதிநிதித்துவதத்தை இழக்கச் செய்த 'கருணா அம்மான்' என்பவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரனும் வெறும் பசப்பு வார்த்தைகள் பேசி  மக்களை ஏமாற்றி  வருகின்றனர்” எனச் சாடினார்.

“இவ்விருவரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதில் தற்போதைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் கருணா அம்மான் தேர்தல் முடிவுற்றதும் 3 மாதங்களுக்குள் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதாக வாக்குறுதி வழங்கினார். இது தவிர, பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அம்பாறை மாவட்டத்துக்கு இனி வர மாட்டேன் எனக் கூறியிருந்தார்.

“கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கு யாரும் எவருக்கும் தடையாக இருக்கத் தேவையில்லை. இவ்விடயம் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினையாகும். முஸ்லிம் மக்கள் இவ்விடயத்தால் பாதிக்கப்படப்போவதில்லை. இதனூடாக, முஸ்லிம் மக்களை அடக்கி ஆள வேண்டும் என்ற நோக்கம் அல்ல என்பதைத் தெரிவிக்கின்றேன். இதை அரசியலாக்க அரசியல்வாதிகளே முயல்கின்றனர்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X