2025 மே 05, திங்கட்கிழமை

‘சாதாரண நோய் ஏற்பட்டாலும் கொரோனா பரிசோதியுங்கள்’

Princiya Dixci   / 2021 மே 19 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

 

சாதாரண நோய் அறிகுறிகள் ஏற்பட்டாலும் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று, அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், பொதுமக்களுக்கு, இன்று (19) அறிவுறுத்தியுள்ளார்.

வீட்டில் இருப்பவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத விடத்திலும் திடீர் கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்றின் 3ஆவது அலையில் கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 61 பேர் மரணமடைந்துள்ளதோடு, மொத்தம் 86 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அதிகாரிகளாலும் பொலிஸாராலும் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை சிலர் உதாசீனம் செய்து வருவதால், கிழக்கு மாகாணத்தில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 121 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு, அவதானத்துக்குரிய வலயங்களாக மட்டக்களப்பு, தெஹியத்தக்கண்டி, திருகோணமலை, கிண்ணியா மற்றும் மூதூர் ஆகிய 05 வைத்தியதிகாரி பிரிவுகள் இவ்வாரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிக அவதானமாக  இருக்குமாறு கேட்டுள்ளார்.

திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 2,248 பேரும், மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,564 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,574 பேரும், அம்பாறை சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 1,226 பேருமாக கிழக்கு மாகாணத்தில் 6,612 பேருக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X