2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் தெரிவானமை தேசிய கௌரவமாகும்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டமை சிறுபான்மை சமூகத்துக்கு கிடைத்த தேசிய கௌரவமென்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்ஸுடின் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'இந்த நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த நாட்டை  பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சி செய்துவந்தன. இருப்பினும், தற்போது தேவைகளின் நிமித்தம் பலமான ஆட்சி அமைப்புக்காக சில சிறிய கட்சிகளை இணைத்து  ஆட்சி இடம்பெற்றிருப்பதை இலங்கையின் அரசியல் வரலாற்றில் காண முடிகிறது.

இனவாதக் கூக்குரல்கள் அவ்வப்போது எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தாலும்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் புதிய அரசியல் கலாசாரம் உதயமாகியுள்ளதை  அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காட்டுகின்றன. இந்த அரசியல் கலாசார மாற்றத்தின் சொந்தக்காரர்கள் இந்நாட்டில் வாழும் ஏறக்குறைய 30 சதவீத சிறுபான்மையினர் என்பதை பெருமையுடன் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த ஜனவரி 8ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் புரட்சிக்கு வித்திட்டவர்களும் சிறுபான்மையினரே.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகத்தினர் கௌரவத்துடன் வாழ வேண்டுமாயின், நாடாளுமன்றத்திலும் சரி நாடாளுமன்றத்துக்கு  வெளியிலும் சரி சிறுபான்மை சமூகத்தின் அபிலாஷைகளுக்கும் உரிமைகளுக்கும் எதிராக எழுப்பப்படும் குரல்களுக்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதோடு, செயற்படவும் வேண்டும். அப்போதே இந்த நாட்டில் சிறுபான்மையினர் தலைநிமிர்ந்து வாழ முடியும். அற்காக அனைவரும் ஒன்றுபடுவது காலத்தின் தேவையெனவும் இவற்றை முன்னெடுக்க முன்வருமாறு இத்தருணத்தில் சிறுபான்மை சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .