2025 மே 19, திங்கட்கிழமை

'நிரந்தர நியமனம் இழுத்தடிக்கப்படுமாயின், உண்ணாவிரதப் போராட்டம்'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கடந்த 20 வருடகாலமாக கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுமாயின், சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அம்பாறை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்; ஆகியோருக்கு இன்று புதன்கிழமை கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;, 'கிழக்கு மாகாணத்தில் 445 தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமின்றி உள்ளனர். 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட பல நேர்முகப் பரீட்சைகளுக்கு இவர்கள் தோற்றியபோதிலும், இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

மேலும், 2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனத்தின்போது, உண்மையாகப் பணியாற்றிய தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு, அரசியல் செல்வாக்கின் மூலம் புகுத்தப்பட்ட சிலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன'; என்றார்.

'பாதிக்கப்பட்டுள்ள 445 பேரின் நியமனம் தொடர்பில் கடந்த வருடம் கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு, மத்திய அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தபோதிலும், இன்னும் அதற்கான நடவடிக்கை எதுவும் கல்வி அமைச்சால் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை,

கடந்தகால அரசாங்கங்களின் இழுத்தடிப்புக் காரணமாக இத்தொண்டர் ஆசிரியர்களில் பலர் 45 வயதைத் தாண்டி உள்ளனர். அதனால், இவர்கள் வேறு அரசாங்கத் தொழில்களிலும்  இணையமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தம், சுனாமி அனர்த்தம் உள்ளிட்ட இக்கட்டான காலப்பகுதியில் எவ்வித கொடுப்பனவுமின்றி மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பாரிய பங்களிப்புச் செய்து, அரசாங்க நிர்வாகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவந்த எமது தொண்டர் ஆசிரியர்கள், தற்போது வாழ்வாதாரமின்றி விரக்தி நிலையில் காணப்படுகின்றனர்.

தொழில்வாய்ப்பில் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாங்கம், இக்கட்டான சூழ்நிலைகளின்போது அரசாங்கக் கல்வித்துறைக்கு உதவிய தொண்டர் ஆசிரியர்களை கணக்கில் எடுக்காமல் புறமொதுக்குவது அநீதியான செயற்பாடாகும்'எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X