2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சர்ச்சைக்குரிய காணி விவகாரம்; 12பேர் மாத்திரம் உறுதிகளின் பிரதிகள் ஒப்படைப்பு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அஷ்ரப் நகர் பகுதியில் சர்ச்சைக்குரிய காணிகளில் குடியிருப்போரில் 12 பேர் மட்டுமே தமது காணிகளுக்கான உரித்தினை உறுதிப்படுத்தக் கூடிய அனுமதிப்பத்திரங்களின் பிரதிகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் அண்மையில் ஒப்படைத்திருந்ததாகவும், அவற்றை மாவட்ட செயலாளருக்குத் தாம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம். லத்தீப் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

அஷ்ரப் நகரிலுள்ள தமது காணிகளினூடாக யானை வேலி அமைக்கும் வனவிலங்குத் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு எதிராக அண்மையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர, அப்பகுதி மக்கள் தமது நிலத்துக்கான சட்டபூர்வ அனுமதிப் பத்திரத்தினை முதலில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அனுமதிப் பத்திரமின்றி குடியிருப்போர் அரச காணியில் அனுமதியின்றி குடியேறிய காரணத்தால் அங்கிருந்து வெளியேற்றப்படுவர் எனவும் தெரிவித்திருந்தார்.

மேற்படி அனுமதிப் பத்திரங்களை கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் மாவட்ட செயலாளர் அதன்போது காலக்கெடு விதித்திருந்தார்.

இதற்கமையவே, அஷ்ரப் நகரிலுள்ள 12 பேர் தமது காணிகளுக்குரிய அனுமதிப் பத்திரத்தின் பிரதிகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்ததாகவும், அவற்றினை தாம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் உதவிப் பிரதேச செயலாளர் லத்தீப் கூறினார்.  ஆயினும், மாவட்ட செயலாளரிடமிருந்து இதுவரை குறித்த காணி விவகாரம் தொடர்பில் எதுவித பதிலும் கிடைக்கவில்லை.

இதேவேளை, அஷ்ரப் நகரிலுள்ள பலருக்கு மேற்படி தகவல் சென்றடைவில்லை என்றும், அதனால் அங்குள்ள மக்கள் தமது காணிகளுக்கான உரித்தினை உறுதிப்படுத்தக் கூடிய பத்திரப் பிரதிகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்க முடியவில்லை என்றும் அப்பிரதேச செயலகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தெரிவிக்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .