2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கனகர் கிராம குடியிருப்பு காணிகளை அபகரிக்க முயற்சிப்பதாக முறைப்பாடு

Menaka Mookandi   / 2011 மே 10 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

பொத்துவில் ஊறணிப்  பிரதேசத்தில் மக்கள் குடியிருக்கும் காணிகளுக்கு உரிமை கோரி பொலிஸ் பாதுகாப்புடன் மற்றொருவர் நிலஅளவை செய்ய மேற்கொண்ட முயற்சி பிரதேச மக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது.

ஊறணி, கனகர் கிராமத்தில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றன. இக்குடியிருப்பு பிரதேசத்தில் கொழும்பை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஓருவர் தனக்கு இப்பகுதியில் 59 ஏக்கர் நிலப்பரப்புக்கான ஆவணம் உள்ளது எனக் கூறி நிலஅளவை செய்வதற்கு பொத்துவிலுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் ஒத்தாசையுடன் வந்துள்ளதாக பிரதேச மக்களுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் இன்று காலை ஒன்றுதிரண்டு வீதியில் நின்றனர். மக்களை வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் பணித்தபோதும் மக்கள் அங்கிருந்து பகல் ஒரு மணிவரையும் நகரவில்லை.

இதனையடுத்து பொலிஸார் திரும்பிச் சென்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் ம.துரைரத்தினம் தெரிவித்தார். கடந்த 1965ஆம் ஆண்டு மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் பெயரில் கனகர் கிரமாம் உருவாக்கப்பட்டு காணி ஆவணங்கள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டன.

இக்கிராமத்தின் தமிழர் குடியிருப்பு நிலங்களை அபகரித்து உல்லாச விடுதிகள் கட்டுவதற்காக அரசியல்வாதிகளின் ஒத்தாசையுடன் அடிக்கடி இப்பிரதேச மக்களை அச்சுறுத்தி வருவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துவதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .