2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

பயிர்ச்செய்கை காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

பொத்துவில் பிரதேச தமிழ், முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம், சேனைப்பயிர் செய்து வந்த காணிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க கிழக்கு மாகாண சபை அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மிரருக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

பொத்துவில் பிரதேசம் கடந்த 03 தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைகள் மற்றும்  இயற்கை அனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.

அம்பாறை மாவட்டத்தின் தாண்டியடி, கோமாரி, ஊரனி, 60ஆம் கட்ட கிராமம் மற்றும் கனகர் கிராமம் ஆகிய கிராமங்களில் தமிழ் மக்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளில் சேனைப்பயிர் செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்தனர்.
இதேவேளை, கனகர் என்ற கிராமத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். எனினும், கடந்த கால யுத்த சூழ்நிலையால் அச்சத்தின் காரணமாக தமிழ் மக்கள் தங்களின் காணிக்குள் செல்ல முடியாத சூழ்நிலைகள் ஏற்பட்டன.

இதேபோன்று பொத்துவில் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த கிரான் கோவையிலுள்ள 502 ஏக்கர் விவசாயக்காணி, செங்காமம், தேக்கன் சேனை, தோணிக்கம, ஆம வெட்டுவான் மற்றும் இறத்தல் போன்ற பிரதேசங்களில் விவசாயம், சேனைப்பயிர் செய்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அக்கிராம மக்கள் விவசாயம் செய்து வந்த காணிகளில் தற்போது விவசாயம், சேனைப்பயிர் செய்வதை வனவள பாதுகாப்புத் திணைக்களம் எல்லையிட்டு தடை செய்துள்ளது.  

இது குறித்து பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நான் பல தடவைகள் வனவள அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுத்து வந்துள்ளேன். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பொத்துவில் பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் விவசாயம், மேட்டு நிலப் பயிர்ச்செய்கை செய்வதற்கான அனுமதியைப் பெற அவசர நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபையிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X