2025 ஜூன் 30, திங்கட்கிழமை

600 பொலிஸாரின் 25ஆவது வருட நினைவு தினம் நாளை அனுஷ்டிப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 09 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் கடத்தப்பட்ட 600 பொலிஸாரின் 25ஆவது வருட நினைவு தினம், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை, கல்முனை மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலையங்களில் வியாழக்கிழமை (11) நடைபெறவுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் 1990ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகள் முறித்துக்கொண்ட நிலையில் அன்று காலை 11 மணியளவில் கிழக்கு மாகாணத்திலிருந்த பொலிஸ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன், 600 பொலிஸாரை தமிழீழ விடுதலைப் புலிகள் கடத்திச்சென்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, கல்முனை மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் பொலிஸாரே கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கடத்தப்பட்டிருந்தனர். எனினும், தமிழ் பொலிஸார் விடுவிக்கப்பட்டிருந்தபோதிலும் , சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிஸார் ஒரு வருடமாகியும் வீடு திரும்பாத நிலையில், அப்போதைய அரசாங்கம் அவர்கள் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கியிருந்தது.  

கடத்தப்பட்ட பொலிஸார், தமிழீழ விடுதலைப் புலிகளால் அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு, ரூபஸ்குளம் பகுதியில் கொல்லப்பட்டு அங்கு உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன என்று அந்த மரணச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், இவர்களின் சம்பளம் இன்றுவரை உறவினர்களுக்கு மானியமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. 

இச்சம்பவம் இடம்பெற்று நாளை 10ஆம் திகதியுடன் 25 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையிலும், கடத்தப்பட்ட பொலிஸார் 600 பேரினதும் உறவினர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி நிற்கின்றார்கள். 

இதேவேளை, 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், '600 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடத்தல் சம்பவம் கவலைக்குரியது. இக்கொலைகளின் தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் அது கொண்டுள்ள தன்மை காரணமாக இவ்விடயம் முழுமையான விசாரணைக்குரியது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X