2025 ஜூன் 28, சனிக்கிழமை

'இனவாதிகளை சிங்கள மக்களும் விரைவில் நிராகரித்துவிடுவார்கள்'

Princiya Dixci   / 2015 ஜூன் 25 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

முஸ்லிம்களின் மனங்களை வேதனைப்படுத்தி வருகின்ற பொதுபலசேனா மற்றும் ஹெல உறுமய போன்ற இனவாத அமைப்பினரை விரைவில் சிங்கள மக்களும் நிராகரித்துவிடுவார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, இன்று வியாழக்கிழமை (25) தெரிவித்தார்.

முஸ்லிம்களின் வில்பத்து மீள்குடியேற்ற விவகாரம் தொடர்பில் இன்று அவர் வெளியட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
வில்பத்து மரிச்சுக்கட்டி விடயத்தில் இனவாதத்தை ஏற்படுத்தி முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, மனிதாபிமான முறையில் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடைபெற வேண்டும்.

வடமாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு இலங்கையின் பல மாகாணங்களில் கடந்த 20 வருடகாலமாக அகதிகளாக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்தனர்.

அகதிகளாக்கப்பட்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த வடமாகாண முஸ்லிம்; மக்களின் மீள்குடியேற்றத்தை இனவாதமாக மாற்றும் இனவாத அமைப்புகளும் இனவாதிகளும் கடந்த காலங்களில் இனவாத உணர்வுகளை தூண்டியவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதனை ஒரு பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் எமது நாட்டில் கடந்த 30 வருட காலமாக யுத்த சூழ்நிலையால் சகல இன மக்களும் பல துன்பங்களை அனுபவித்தனர். வட, கிழக்கில் யுத்த காலத்தில் வெளியேற்றப்பட்ட சகல மக்களும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வில்பத்து மறிச்சுக்கட்டி விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் அரசாங்க உயர் அதிகாரிகளும் மனிதாபிமானத்துடன் செயற்பட்டமை பாராட்டத்தக்க விடயமாகும். 

ஆனால், நல்லாட்சி ஏற்படுத்தப்பட்ட பின் வில்பத்து விடயத்தில் இனவாத சிந்தனைகள் தொடர்புபடுத்துவது நல்லாட்சி என்ற பெயருக்கே கலங்கம் ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். கிழக்கு மாகாண சபையில் இனபேதமின்றி கடந்த காலத்தில் நமது நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயல்களை கண்டித்து நாம் கண்டன பிரேரணைகளை நிறைவேற்றி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
 
சில இனவாத சக்திகள் முஸ்லிம் மக்கள் மீது தவறான இனவாத உணர்வுகளை தொடர்ந்தும் தூண்டிவருவதனை கிழக்கு மாகாண சபை முழுமையாக கண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .