2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'மைதானங்கள் அதிகரிக்கும்போது சிறைச்சாலையின் தேவை குறையும்'

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

மைதானங்கள் அதிகமாக இருக்கின்றபோது சிறைச்சாலையின் தேவை குறைவடைந்து செல்லும். விளையாட்டும் மைதானங்களும் மனிதனில் உடல், உள ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தி நல்வழிப்படுத்தும்  பாதைக்குள் அழைத்துச் செல்கின்றது என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன்  தெரிவித்தார்.

இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (10) பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற போட்டிகளில் அதிகளவான கழக வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,  

வழக்கத்துக்கு மாறாக இம்முறை பின்தங்கிய பிரதேசங்களின் இளைஞர், யுவதிகள் அதிகளவான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியுள்ளமை பாராட்டப்பட வேண்டியவை என்றார்.

அளிக்கம்பை போன்ற கிராமத்திலிருந்து இம்முறை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டிய இளைஞர், யுவதிகளையும் கௌரவிப்பதுடன்; அவர்களை ஊக்குவித்த அருட்தந்தையர்கள் இருவரும், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரும் பாராட்டப்படவேண்டியவர்கள் என குறிப்பிட்டார்.

மேலும்; இடம்பெறவுள்ள மாவட்டமட்ட விளையாட்டுப் போட்டிகளிலும் தேசிய மட்டப்போட்டியிலும் இதேபோன்று பல வெற்றிகளை பெற்று சாதனைகள் பல படைக்கவேண்டும் எனவும் கூறினார்.

இவ்உயரிய சிந்தனையை மையப்படுத்தி கிராமத்தவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அலிக்கம்பை மைதானம் உட்பட பிரதேசத்தின் பல்வேறு பகுதி மைதானங்களும் பல இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களான யூ.எல்.உமர் லெவ்வை மற்றும் யூ.எல்.எம்.மஜீத், ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ, அளிக்கம்பைக் கிராமப் பங்குத்தந்தையர்களான றொஹான், தேவராஜ் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பின்னர் கருத்து வெளியிட்ட அருட்தந்தை தேவராஜ், பல்வேறு திறமைகள் மிக்க, இலைமறைகாயாகவிருந்த தமது பிரதேச இளைஞர்களுக்கு இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை வழங்கி, அவர்களது திறமைகளை வெளிக்கொணர உதவிய பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தருக்கு தனது பங்கு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதாக கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .