2026 மே 13, புதன்கிழமை

dd

ஆடிவேல் விழா இரத்து

Mayu   / 2026 மே 13 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை: கிழக்கிலங்கையின் தென்கோடியில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பாலஸ்தாபனக் குடமுழுக்கு விழா, எதிர்வரும் மே மாதம் 19-ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

பாலஸ்தாபனப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதால், இவ்வருடம் நடைபெறவிருந்த ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மற்றும் தீர்த்தோற்சவம் என்பன நடைபெறமாட்டாது என ஆலய வண்ணக்கர் எம்.டி. சுதுநிலமே திசாநாயக்க (சுதா) தெரிவித்துள்ளார். இதன்படி, கொடியேற்றம், 15 நாட்கள் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் கடற்தீர்த்த உற்சவம் ஆகிய அனைத்தும் இம்முறை இடம்பெறமாட்டாது.

இருப்பினும், கதிர்காம உற்சவ காலத்தை ஒட்டிய ஆடிவேல் விழா காலத்தில் (மே 15 முதல் 29 வரை), பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கூடத்தில் வழமையான நித்திய பூசைகள் மாத்திரம் இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உகந்தமலை ஆலயத்தில் இறுதியாக 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதற்கமைய, தற்போது புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி நிரல்:

மே 18 (திங்கட்கிழமை) காலை 8:00 மணி முதல் கர்மாரம்ப கிரியைகள் தொடங்கும்.

மே 19 (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 11:45 முதல் நண்பகல் 12:00 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் பாலஸ்தாபனக் குடமுழுக்கு நடைபெறும்.

ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.கு. சீதாராம் குருக்கள் தலைமையில் இந்தத் திருக்குடமுழுக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .