2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஈரானுக்கு ட்ரம்ப் 48 மணி நேர கெடு

Freelancer   / 2026 மார்ச் 23 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மையங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கின. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பல கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 8,000 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின.

கடந்த 23 நாட்களாக நடைபெற்று வரும் போரில், ஈரானின் இராணுவ தளங்கள், எண்ணெய் வயல்கள், அணுசக்தி மையங்கள், ஏவுகணை தளங்கள் ஆகியவை கடுமையாக சேதம் அடைந்தன. ஈரானின் முக்கிய தலைவர்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆனாலும், ஈரான் அரசு அமெரிக்காவிடம் சரண் அடையாமல், தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை, எந்த அச்சுறுத்தலுமின்றி முழுமையாக ஈரான் திறந்து விட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 48 மணி நேர கெடு விதித்துள்ளார். இதுகுறித்து, தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று வெளியிட்ட தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, நாளை காலைக்குள் ஈரான் முழுமையாகத் திறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஈரானின் பல்வேறு மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும். மிகப்பெரிய மின் நிலையத்தின் மீதே முதலில் தாக்குதல் நடத்தப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .