2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்துகிறது சீனா?

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா மீதான தடைகளை அமுல்படுத்துவதிலிருந்து, தளர்வான போக்கை வெளிப்படுத்த, சீனா ஆரம்பித்திருக்கிறது எனத் தெரிவித்துள்ள, ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் செயற்குழுவொன்று, அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, திறைசேரித் திணைக்களத்திடம் கோரியுள்ளது.

பிரதிநிதிகள் சபையின், ஐ.அமெரிக்க - சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மீளாய்வுச் செயற்குழு, 180 நாள்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது. இந்த அறிக்கையில், எதிர்காலத்தில் தடைகளை விதிக்கப்படக்கூடிய வகையில், வடகொரியாவுடன் வர்த்தகத் தொடர்பைக் கொண்டுள்ள சீனாவின் நிதியியல் நிறுவனங்கள், வணிகங்கள், அலுவலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய இரகசியப் பட்டியலொன்றையும் உள்ளடக்குமாறு, செயற்குழு கோரியுள்ளது.

வடகொரியா மீதான தடைகளை, 2017ஆம் ஆண்டிலும் இவ்வாண்டு ஆரம்பத்திலும், முழுமையாக அமுல்படுத்தும் வகையில் சீனா செயற்பட்டது போன்றுள்ளது எனத் தெரிவித்த அச்செயற்குழு, சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் மேம்படத் தொடங்கிய பின்னர், அதில் தளர்வு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.

வடகொரியாவின் நீண்டகாலத் தோழமை நாடாகச் சீனா இருந்த போதிலும், கடந்த காலங்களில், அவ்வுறவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், ஐ.அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்ட அதே காலத்தில், சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான உறவும் மேம்பட ஆரம்பித்தது.

இந்நிலையிலேயே, வடகொரியாவைச் சேர்ந்த பணியாளர்கள், சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் பணியாற்றுவதற்காக மீண்டும் சென்றுள்ளனர் எனக் குறிப்பிட்ட செசயற்குழு, எல்லை நகரங்களில் பொருளாதார நடவடிக்கைகளும் சுற்றுலாத்துறையும் மீண்டும் அதிகளவில் இடம்பெற ஆரம்பித்துள்ளன எனவும், விமானப் பறப்புகளும் இரு பக்கங்களாகவும் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டை மீறி, அணுவாயுத, ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டதன் காரணமாக, ஐ.நா பாதுகாப்புச் சபையால், பல்வேறுபட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X