2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஒத்துழையாமையின் பிரதிபலிப்பு

Johnsan Bastiampillai   / 2022 ஜனவரி 24 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

கொவிட்-19 பெருந்தொ ற்றாகப் பரவியதற்கும், ஒவ்வொரு நாடும் இப்போதும் இன்னல்படுவதற்கும் ஒற்றுமையின்மையும் ஒத்துழையாமையுமே காரணமாகும். இதனை யாருக்கும் மறுத்துவிட முடியாது.  உலகின் அனைத்து நாடுகளிலும் படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை வாழ்வாதாரத்தையே முன்னுரிமைக்குரிய விடயமாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இதற்கு முக்கியமானதொரு காரணமாகும்.  

2022ஆம் வருடத்துக்கான நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து, தனது அக்கிராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ‘நான் கொண்டது மாத்திரமே கொள்கை; அதுவே இலக்கு; வேறு யாருக்கும் கொள்கையில்லை; நோக்கமில்லை, இலக்கில்லை’  என்ற தோரணையிலேயே உரையாற்றியிருக்கிறார். 

இந்த உரையானது, பொதுஜன பெரமுன கூட்டணியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள்  கூட ஒத்துழையாமை என்ற நிலைப்பாட்டில் இருக்கையிலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவரது உரை மீதான மறுநாள் விவாதம், வெறிச்சோடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றமையை இதற்கு அடையாளமாகச் சொல்லலாம்.

“ஜனாதிபதியின் உரை, ‘யானை விழுங்கிய விளாம்பழம்’ போன்றது. அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த ஜனாதிபதி, தனது கொள்கை அறிக்கையில் ஏன் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்  என்பதை தெளிவுபடுத்துவார்  என எதிர்பார்த்தால், அவர் தனது பழைய கதைகளையே மீண்டும் கூறியிருக்கிறார்” என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கருத்து வெளியிட்டுள்ளார்.

“இராணுவ சிந்தனையிலும், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளிலும் மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சிந்தனை இருக்கிறது. இந்த நாடு நியாயமான அல்லது நீதியான பாதையில் செல்வதற்கு தயாரில்லை என்பதைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது.  இந்த நாடு ஒரு சீரான பாதையில் நேர்த்தியாகச் செல்ல வேண்டுமென்றால் இந்த நாட்டினுடைய மிக முக்கியமான இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால்  முதலில் ஜனாதிபதி தன்னுடைய மனதை  மாற்ற வேண்டும். அப்போதுதான்  ஏனைய இனங்களும் மதிக்கப்படும். அவர்களுடைய சுதந்திரமும் பேணப்படும்” என்று என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் உரை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “ஜனாதிபதியின் உரையில் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் பற்றிய பார்வை எதுவும் இருக்கவில்லை. முழுமையான உரையில் ஓரிடத்தில் நாட்டில் வெளிநாட்டு நாணயம் தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதைத் தவிர, பிரிதொரு விடயமும் இல்லை. நீண்டகாலமாக நாட்டில் இருக்கின்ற பிரச்சினையென ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு, அது கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த பல அரசாங்கங்களாலும் தீர்க்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி, அதன் மூலம் அந்தப் பிரச்சினையை இன்னொருவர் தோளில் சாட்டவே ஜனாதிபதி முயன்றுள்ளார். ஆனால், பிரச்சினையை அடையாளம் கண்ட அவர், தீர்வினை அடைவதற்கான வழிமுறைகளை முன்வைக்கத் தவறிவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பலரும் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொருவருடைய கருத்தும் பெரும் விமர்சனங்களையே வெளிப்படுத்தியிருக்கின்றன.

ஆனால், ஜனாதிபதியைப் பொறுத்தவரையில்,  இன்னமும் மூன்று வருடங்கள் பொறுத்திருங்கள்; நான் சொன்னதைச் செய்வேன் எனச் சொல்லலாம். அந்த வகையில், மாற்றம் எதுவும் இன்றி, தான் கொண்ட கோலத்தை நடத்தவே திட்டமிடுகிறார் என்பது வெளிப்படையாகின்றது.
பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு உருவாக்க முயற்சி, காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம், பசுமை விவசாயக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியிருந்த இந்த உரையில், இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து எந்த ஒரு கருத்தையும் முன்வைக்கவில்லை. பெரும் எதிர்பார்ப்பாக இருந்த வேறும் பல விடயங்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை என்பது பிரதானமான விமர்சனங்களாக இருக்கின்றன.

பொதுவான நாட்டின் செயற்பா டுகள் குறித்து, அரசாங்க த்தில் அங்கம் வகிப்பவர்க ளுக்கு இடையில் ஒத்துழை யாமை காணப்படு கிறது. ஒத்துழை யாமை என்பதற்கு தலைமைக்கு ஒத்துழைக் காமை, தலைமை ஒத்துழைக் காமை, ஒருவருடன் ஒருவர் உடன்ப டாமை என்று பலவாறாகக் கொள்ளமுடியும்.

இங்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இந்தக் குழப்பம் இருப்பதை அறிய முடிகிறது. அதேநேரத்தில் சர்வாதிகாரப் போக்கான ஜனாதிபதியின் செயற்பாடு காரணமாக, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், விலகியிருக்கும் அல்லது ஒதுங்கியிருக்கும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாகவே கொள்ள முடிகிறது.

இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிக்கப்பட்டமையானது, பல்வேறு விதமான பதிவுகளை விட்டுச் சென்றிருக்கிறது. அது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை ஓர் இறுக்கமான கட்டுப்பாடான நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இதனைச் சர்வாதிகாரச் செயற்பாட்டு முறைமையாகவே கொள்ள முடியும்.

இவ்வாறிருக்கையில், நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு அதிகார ரீதியான போட்டிகளுக்குள் முண்டுப்பட்டு, அடக்குமுறை ரீதியான நெருக்கடிகளுக்குள் சிக்குண்டு, அகிம்சை, ஆயுதம், இராஜதந்திரம் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கான ஒத்துழையாமை ஒன்றினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உருவாக்கி வருகிறார்.

ஆரம்பத்தில் வெளிநாடுகளின் அழுத்தங்களையும் புலம்பெயர் அமைப்புகளின் கருத்துகளையும் சட்டை செய்தாத அவர், இப்போது புலம்பெயர் அமைப்புகளை நாடி வருகிறார்.

இதற்கு நல்ல உதாரணம் அமெரிக்காவின் நியூயோர்க் சொன்றிருந்த வேளை, அவர் விடுத்த புலம்பெயர் தமிழர்களுக்கான அழைப்பு மற்றும் சில தினங்களுக்கு முன்னர் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட்டிடம் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பேற்படுத்தும்படி கோரியமை போன்றவற்றினைக் குறிப்பிட முடியும்.

முக்கியமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினைச் சந்திப்பதற்கான அழைப்பினை தாமாகவே விடுத்துவிட்டு, அதனை இரத்துச் செய்து இன்னமும் மீள அழைக்காதிருப்பது கூட, ஓர் ஒத்துழையாமையின் படிநிலையே.

இது ஏன் நடைபெறவில்லை என்பதற்கு காரணம் திரைமறைவானதாகவே இருக்கிறது. மிகவும் இராஜதந்திரமாக நகர்வதாகக் காட்டிக்கொள்ளும், வீண் முயற்சியாகவே இதனைக் கொள்ள முடியும்.

உள்ளே இருப்பவர்களை உதறித்தள்ளிவிடுதல் என்ற நிலைப்பாட்டுக்கு, நாட்டின் பொருளாதாரத்தினை நிமிர்த்துவது ஒன்றே நோக்கம் என்றே கொள்ள முடியும். இன்றொரு வகையில் தமிழர்களை ஏமாற்றும் மற்றொரு முயற்சியாகவும் சந்தேசிக்க முடிகிறது.

அந்தவகையில் அவர்களுடைய ஒழுங்கிலேயே, தமிழ் மக்களின் அரசியல் தரப்பும் ஒத்துழையாமை நிலைப்பாட்டினை பிரதிபலித்திருக்கிறது. அதன் ஒரு படிதான் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கான 13ஐ அமல்படுத்தக் கோரும் ஆவணக் கையளிப்பாகும்.

மின்சாரம் துண்டிக்கப்படுமா, துண்டிக்கப்படாதா என்று தெரியாத நிலையில் இருக்கும் மக்கள் அரசியல்வாதிகளின் இறுமாப்பு மோதல்களுக்குள் சிக்கமாட்டார்கள் என்றாலும், பெருந்தேசியச் சிங்களப் போக்கு இனவாதமானது இலங்கையில் எழுந்தே நிற்கிறது.

இந்த நிலைப்பாட்டுக்கு  சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை தெரியாத ஒன்றல்ல. தெரிந்தும் தெரியாமலிருக்கின்ற ஒத்துழையாமைதான் காரணம்.

இந்த ஒத்துழையாமையின் பிரதிபலிப்பாக நாட்டில் உருவாகி வருகின்ற வீணான பிரச்சினைகளை ஜனாதிபதி எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதுதான் மில்லியன் கேள்வி.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  கையாளும் வஞ்சகத் தனமான இராஜதந்திர முறைமை, நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்கிற மாயத்தனம் ஒத்துழையாமையின் முழு வெளிப்படையாகும். இந்த ஒத்துழையாமையானது இன்னமும் பல தசாப்தங்களுக்கு இலங்கை நாட்டை மீட்கமுடியாத நிலையை நோக்கியே நகர்த்தும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .