Janu / 2026 மார்ச் 23 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி கூடி ஆராய்ந்துள்ளது. இந்த ஆராய்வானது இவ்வருடத்திற்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும் என்றும் தகவல் கசிந்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்றை நியமிப்பதற்கான யோசனையை ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ 2026.01.06 அன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இந்த யோசனையின் அடிப்படையில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது.
மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறைப்படி நடத்துவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள 12 பேரில், ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல, முனீர் முழப்பர், அருண் ஹேமசந்திரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணராச்சி, சமன்மலி குணசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி ஆகியோர் அடங்குகின்றனர். எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கடந்த 8 வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கி வருகின்றன. எல்லை நிர்ணய முறைமை இதுவரையில் நிறைவு செய்யப்படாத காரணத்தால், 1988ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்தம் செய்து, தற்போதுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமைக்கமைய தொகுதி அடிப்படையில் தேர்தலை நடத்துவது சிக்கலாகியுள்ளது.
தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டத்தின் குறைகளை அவதானித்து திருத்தங்களை முன்வைக்க 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழு, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் செய்து, அதன் பின்னர் சட்ட வரைவைத் தயாரிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. அதேநேரம், அதுவரையில் விகிதாசாரத் தேர்தல் முறைமையில் தேர்தலை நடத்தலாம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதே தற்போதைய பிரச்சினையாகும்.
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கான தீர்மானத்திற்கு விசேட செயற்குழு வருவது, அரசியல் தரப்பினருக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். அத்துடன், மாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் வாக்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அறியமுடிகிறது. நீண்டகாலக் கோரிக்கைகளான தேர்தல் முறைமை மாற்றம், புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் இதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமையலாம்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் ஜூன் மாதத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும்.
அத்துடன், இவ்வருட செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தொடரை அரசு எதிர்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தொடரில் இலங்கை அரசு மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கு முன்னதாகவே மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும் பின்னர் அவை கைவிடப்படுவதும் நமது நாட்டில் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. இதனால் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் காணப்பட்டாலும், இந்த அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக மாகாண சபைத் தேர்தல் இவ்வருடத்திலேனும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் நிர்வாகத்தை முன்னெடுப்பதாலும், மக்கள் ஆதரவு குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், தேர்தலுக்கான தற்போதைய நகர்வுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன.
சுயநிர்ணயக் கோரிக்கையுடன் தமிழ் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக இந்தியா இதில் தலையிட்டு, 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தீர்வை உருவாக்கியது. அவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாண சபைகளில் வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த சபை காணப்பட்டாலும், ஏனைய மாகாணங்கள் தனித்தனியாக இயங்கி வந்தன. வடக்கு மற்றும் கிழக்கு தற்காலிக இணைப்பின் அடிப்படையில் ஒரே மாகாணமாக 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990இல் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துடன், வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ‘தமிழீழப் பிரகடனத்தை' மேற்கொண்டுவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ஆளுநர்களின் அதிகாரத்திலேயே இம் மாகாண சபை இருந்து வந்தது. 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி (JVP) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.
மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்காக நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது, தேர்தலை நடத்த முடியாத முட்டுக்கட்டை நிலையை ஏற்படுத்தியது. 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013இல் மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், 2014இல் ஊவா மாகாணத்திலும் தேர்தல்கள் இடம்பெற்றன.
இப்போது பழைய முறையிலா அல்லது புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே காலம் கடக்கிறது. வட-கிழக்குத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் ஊடாகத் தமிழர்கள் பெற்ற பயனை விடவும், ஏனைய மாகாணங்களே அதிக பயனை அடைந்துள்ளன. அரசியல் உரிமைகளை அனுபவிக்க அரசியல் கட்டமைப்புகள் அவசியமானவை. அந்த வகையில் கடந்த 8 வருடங்களாகத் தேர்தல் நடைபெறவில்லை என்ற கவலை இவ்வருடத்துடன் நீங்கும் என நம்புவோம். எனினும், ஈரானை மையப்படுத்தி மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வருவதும் தேர்தல் நடைபெறுவதற்குச் சாதகமாக அமைய வேண்டும்.
23.03.2026
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago