2026 மார்ச் 23, திங்கட்கிழமை

பாம்புடன் உருண்டு, புரண்டு நடனமாடிய யுவதி

Janu   / 2026 மார்ச் 23 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஆடை அலங்கார கலைஞர் (Beautician) ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை  புத்தாண்டு இளவரசன் - இளவரசி தெரிவு  போட்டியின் போது, மலைப்பாம்பு ஒன்றை தோளில் சுமந்து நடனமாடிய யுவதியை  கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி.ஜே. பிரேமரத்ன, வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு திங்கட்கிழமை (23) உத்தரவிட்டார்.

வனஜீவராசிகள் திணைக்களம் முன்வைத்த முறைப்பாட்டை பரிசீலித்த நீதவான், நெத்மி ஹிரன்யா என்ற சந்தேக நபரான யுவதியை  கைது செய்ய பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

பாதுகாக்கப்பட்ட உயிரினமாக  பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மலைப்பாம்பு ஒன்றை தோளில் சுமந்து, அதற்கு  துன்புறுத்தல் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் குறித்த யுவதி சந்தேக நபராக  பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். சந்தேக நபரை வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்ட போதிலும், அவர் அதனை  தவிர்த்து வருவதாக அதிகாரி சுட்டிக்காட்டினார்.

 "கொழும்பு குருந்துவத்தை ரோயல் மாஸ் எரீனா (Royal MAS Arena) வளாகத்தில் நடைபெற்ற இந்த சித்திரை  புத்தாண்டு விழாவின் போது, சந்தேக நபர் மலைப்பாம்பை  தோளில் சுமந்து நடனமாடியுள்ளார். வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு  சட்டத்தின் கீழ் இது தண்டனைக்குரிய குற்றமாகும். இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் இதுவரை அதற்கு  பதிலளிக்கவில்லை." என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, சந்தேக நபரை  தேடிப்பிடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பிடியாணை பிறப்பிக்குமாறும், குறித்த போட்டியை ஏற்பாடு செய்த ஆடை அலங்கார கலைஞரிடம் வாக்குமூலம் பெற அனுமதிக்குமாறும் அதிகாரிகள் கோரினர்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரை கைது செய்ய உத்தரவிட்டதுடன், போட்டி ஏற்பாட்டாளரான ஆடை அலங்கார கலைஞர் சந்திமால் ஜயசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .