Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 17 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி நீண்டகாலமாகப் பேசப்பட்டு வருகின்றது. இதனை மையமாகக் கொண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையும் உலக நாடுகள் பலவும் பலதரப்பட்ட நகர்வுகளைச் செய்கின்றன. சரியோ பிழையோ, தமிழ்ச் சமூகம் இதற்கான ஓர் அழுத்தத்தைக் கொடுக்கின்றது.
மறுபுறத்தில் இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள், ஊழல்கள் பற்றிய புழுதி படிந்த கோப்புகள் மீளவும் புழுதி தட்டி எடுக்கப்படுகின்றன. பட்டலந்த போன்ற சில கோப்புகளைக் கையாள்வதில் புதிய அரசாங்கம் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும் ஏனைய பல அநியாயங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கின்றது அல்லது அப்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் யுத்த காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது சகோதர தமிழ்ச் சமூகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், 50 வருடங்களுக்கும் மேலான இன முரண்பாடும் 30 வருட யுத்தமும் தமிழர்களுக்கு மட்டுமன்றி சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கும் இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு போன்ற சம்பவங்களில் கத்தோலிக்க சமூகமும் பாதிக்கப்பட்டது. மறுபுறத்தில் ஏதோ ஒரு விதத்தில் பொருளாதார ரீதியான அல்லது வர்க்க ரீதியான பாகுபாடுகள் காரணமாக மலையக தோட்டத் தொழிலாளர்களிற்குக் கூட
இன்று வரை ‘நீதம்’ கிடைக்கவில்லை.
எனவே, அனுரகுமார அரசாங்கத்தின் வருகை என்பது உண்மையிலேயே ஒரு ‘நிலைமாறு காலம்’ என்றால், நாட்டில் இடம்பெற்ற எல்லா விதமான அநீதிகளுக்கும் படிப்படியாக நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும். இதற்கான அழுத்தத்தைத் தமிழர்கள், கத்தோலிக்கர்கள் பிரயோகித்து வருகின்றார்கள்.
ஆனால், யுத்த காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் அவ்வப்போது அரச படைகளாலும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், உரிமை மீறல்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுமாறு முஸ்லிம் அரசியல்வாதிகள், ஆளும் தரப்பு
எம்.பிக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் போதுமான அளவுக்குத் தொடர்ச்சியாக வலியுறுத்தவில்லை.
நீண்டகாலமாக சிங்கள இனவாதக் குழுக்கள், அரசியல் சக்திகளால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநியாயங்கள் தொடர்பான கோப்புக்களை ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் தூசிதட்டவும் இல்லை,
‘கொடூர யுத்தத்திலும் அதற்கு முன் - பின்னான காலங்களிலும் முஸ்லிம் தலைமுறைகள் எதிர்நோக்கிய படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் பொறுப்புக் கூறல்கள் இன்றி காலப் பெருவெளியில் புதைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்வது நம்மீது திணிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பொறுப்பாகும்’ என்று, ‘சாட்சியமாகும்.
உயிர்கள்’ ஆய்வு நூலின் ஆசிரியர் சர்ஜூன் ஜமால்டீன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அது சரிவர நடக்கவில்லை என்பதுதான் கவலை தரும் உண்மையாகும்.
இஸ்லாமோபோபியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளும் இலங்கை முஸ்லிம்களின் இழப்புக்களைப் பெரிய விடயமாகப் பார்க்கவில்லை.
பலஸ்தீன் வரை... பல முஸ்லிம் தேசங்கள் அழிக்கப்படுவதைக் கண்டுகொள்ளாத உலகம், பிடில் வாசித்துக் கொண்டிருக்கும் சவூதி போன்ற அரபு நாடுகளுக்கு இது
ஒரு செய்தியாகக் கூட இருந்திருக்குமா என்பது சந்தேகமே.
தமிழர்கள் தமது வலிகளைச் சொல்லி பகிரங்கமாக அழுகின்றனர். முஸ்லிம்கள் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கின்ற சமுதாயமாகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பின்னால் பல தரப்புக்களின் பெரிய அரசியல் உள்ளது.
ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், சோடாப் போத்தலில் இருந்து வெளிவரும் ‘அழுக்கு வாயுவை’ போல, பெரும் வாதப் பிரதிவாதங்களை நடத்தி வீராப்பு பேச்சுக்களைப் பேசி விட்டு முஸ்லிம் சமூகம் அடங்கி விடுவதைக் காண முடிகின்றது.
எந்தவொரு விவகாரமும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கே முஸ்லிம் அரசியல்வாதிகளிடையேயும் சமூகத்தின் மத்தியிலும் பேசுபொருளாக இருக்கின்றது. இப்படியே பருவகால (சீசன்) அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள், பிரச்சினைகள் கையாளப்படுகின்றன.
வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுத இயக்கங்களால் முஸ்லிம்கள் எதிர்கொண்ட மீறல்கள், இனக் கலவர காலங்களில் ஏற்பட்ட இழப்புகள், அரச படைகளால் ஏற்பட்டவை, இந்திய அமைதி காக்கும் படைகளின் கைங்கரியங்கள், கிளர்ச்சிகள் இடம்பெற்ற காலங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இனவாத குழுக்கள் நிகழ்த்தியவை மற்றும் ஜனாஸா எரிப்பைக் கூட இந்த வகைக்குள் உள்ளடக்க முடியும்.
மீறல்களுள் முதன்மையானது வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு ஒரு சில மணிநேர அவகாசத்தில் அங்கிருந்து தமிழீழ புலிகளால் வெளியேற்றப்பட்டமை ஆகும். அதாவது ஒரு சிறுபான்மை இனத்தின் நிலமீட்புக்காக போராடிய குழு, இன்னுமொரு சிறுபான்மைச் சமூகத்தைச் சொந்த இடத்திலிருந்து இனச் சுத்திகரிப்புச் செய்த துயர் நிகழ்வு இது இது விடயத்தில் இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை.
இறைவழிபாட்டுக்காக முஸ்லிம்கள் ஒன்றுகூடுகின்ற பள்ளிவாசல்களுக்குள் நடந்தேறிய உயிர் பறிப்புக்கள் மற்றுமொரு முக்கிய உரிமை மீறலாகும்.
அந்த விதத்தில் ஏறாவூர், காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்கள் உயிர் பறிக்கப்பட்டனர். அக்கரைப்பற்று பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் வேறு சில இடங்களிலும் வயல்களிலும் பொது இடங்களிலும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
அழிஞ்சிப்பொத்தானை அழிவுகள், குருக்கள்மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் கொல்லப்பட்டமை, ஊறுகாமம் அசம்பாவிதம், அக்போபுர மரணங்கள், அத்துடன், கல்முனை வன்முறை, புதூர் படுகொலை, சாய்ந்தமருது குண்டுத் தாக்குதல், பள்ளித்திடல் படுகொலைகள் என இந்த சம்பவங்கள் நீண்டு கொண்டே போகின்றன.
விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்கள் மற்றும் ஒட்டுக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட கப்பம், ஆட்கடத்தல் என்று இன்னுமொரு பட்டியலையும் தொகுக்கலாம்.
இலங்கை, இந்தியப் படையினராலும் ஆங்காங்கு உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், இவை அடக்கி வாசிக்கப்பட்டன.
அரச படையில் பணிபுரிந்த முஸ்லிம்களை ‘சிவிலியன்களாக’ கருத முடியாது என்றாலும், அவர்கள் முஸ்லிம் என்பதற்காக தனியாக பிரித்தெடுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஐநூற்றுக்கு மேற்பட்ட பொலிஸாரின் மரணங்களும் இவ்விடத்தில் நினைவு கொள்ளப்படலாம்.இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும்.
அதாவது, ஆரம்பத்தில் முஸ்லிம்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு மானசீக ஆதரவை வழங்கியது மட்டுமன்றி, பல முஸ்லிம் இளைஞர்களும் தமிழர்களின் வேட்கைக்காக இயக்கங்களில் இணைந்து களப் போராடினார்கள்.
ஆனால், மேற்குறிப்பிட்ட விதத்தில் முஸ்லிம்களை நோக்கி ஆயுதங்கள் திரும்பிய பிறகுதான், முஸ்லிம்கள்
இந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர் என்பதை கவனிக்க வேண்டும். இதன் பிறுகுதான் முஸ்லிம் அரசியல்தனிவழியில் பயணிக்கத் தொடங்கியது என்பதும், தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவை முஸ்லிம் சமூகம் மீளப் பெற்றது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இது இவ்வாறிருக்க, சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற எழுச்சிகள் மற்றும் ஜூலைக் கலவரம் மற்றும் அழுத்கமை, திகண, அம்பாறை, வட மத்திய மாகாணத்தில் இடம்பெற்ற கலவரங்களும் முஸ்லிம்களின் மீது மீறல்களை விட்டுச் சென்றன. அதுமட்டுமன்றி, ஜனாஸா எரிப்பும் இந்தக் கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்வாறான உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவதற்கு, நீதி கோருவதற்கு அல்லது சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு கடந்த காலத்தில் முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும், முஸ்லிம் எம்.பி.க்களும் முயற்சிக்கவில்லை என்பது மிகப் பெரிய கைசேதமாகும். முஸ்லிம்களுக்கு எதிராக உரிமை
மீறல்களே நடக்கவில்லை என்ற தோற்றப்பாட்டை இது ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். இலங்கையில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் பெறுதல். இனச் சுத்திகரிப்புக்கு நீதி நிலைநாட்டப்படுமாக இருந்தால்... அதில் முஸ்லிம்களுக்கு எதிரான உரிமை மீறல்களும் உள்வாங்கப்படுவது கட்டாயமாகும். ஆதற்காக முஸ்லிம் சமூகம் இனிமேலாவ அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
53 minute ago
3 hours ago