2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் கைதிகள் இருவர் விடுதலை

Thipaan   / 2016 மார்ச் 01 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்து, வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்காக கொழும்பில் அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றம், அரசியல் கைதிகளில் இருவரை விடுதலை செய்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்று கூறப்படும் கணேஷரத்னம் சாந்ததேவன் மற்றும் முருகையா கோமகன் ஆகிய இருவருமே, இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகள், கொழும்பு  விசேட மேல்நீதிமன்ற நீதிபதி அய்ராங்கனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு  எடுத்துகொள்ளப்பட்டது.

அரசதரப்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி விக்கிரமசிங்கவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சார்பில் சட்டத்தரணிகளான  நளனி இளங்கோவன்,  செல்வராஜா துஷ்யந்தன் ஆகியோரது அனுசரணையில் சிரேஷ்ட சட்டத்தரணி கே. வி தவராசா ஆஜரானார்.

இந்த வழக்குகளின் கடந்த தவணை விசாரணையின் போது, தனது வாதத்தை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி தவராசா, இந்த வழக்கில், எதிரிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் கணேஷரத்னம் சாந்ததேவன், முருகையா கோமகன் ஆகிய இருவருக்கும் எதிராக, 2004ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி வெள்ளவத்தையில் வைத்து, கருணா குழுவைச்சேர்ந்த  நான்கு உறுப்பினர்களை  வெடி வைத்துக் கொல்வதற்காக, எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் தலைவர்களின் ஒருவரான நியூட்டனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக, மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மற்றும் வவுனியா மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் பிரதான சான்றாகக் கொண்டு, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வவுனியா மேல்நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது,  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு எதிரிகளினால் வழங்கப்பட்டதாக கூறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம், சுயமாக வழங்கப்படவில்லையென நீதிபதி தெரிவித்துள்ளார்.

குற்ற ஒப்புதல் வாக்குமூலம், நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டதையடுத்து கணேஷரத்னம்

சாந்ததேவனுக்கும் முருகையா கோமகனுக்கும எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு வேறு சான்றுகளில்லையென அரச சட்டத்தரணி, நீதிமன்றுக்கு அறிவித்ததையடுத்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அவ்விருவரையும் விடுதலை செய்துள்ளார்.

இவ்வாறான நிலையில், வவுனியா மேல்  நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை, இந்த நீதிமன்றம் மீண்டும் கேள்விக்குட்படுத்த முடியாதென வாதிட்டார்.

மேலும், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  வழக்குக்களில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மீதான விசாரணையில், சுயவிருப்பத்தின் பேரில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கைதி வழங்கவில்லையென நிராகரித்தால், மற்றைய வழக்குகளை நடாத்த வேறு சான்றுகள் இல்லையெனில், வழமையாக மற்றைய வழக்குகளை, சட்டமா அதிபர் மீளப்பெறுவதே நடைமுறையாகும்; என்றும் சுட்டிக்காட்டினார்.

'வவுனியா மேல் நீதிமன்ற கட்டளையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை இந்த நீதிமன்றத்துக்கும் அரச சட்டவாதிக்கும் கையளித்துள்ளேன். எனவே, வழமைபோல இந்தக் வழக்குகளும் சட்டமா அதிபரினால் மீளப்பெறப்படவேண்டும்' என்று நீதிமன்றத்தில் கோரிநின்றார்.

ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரையில் வவுனியா மேல் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை, 35 வருடங்களின் பின்னர்; கொழும்பு  நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என சட்டமா அதிபர் கோருகிறார்

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி, வழங்கிய கட்டளைக்கு எதிராக  சட்டமா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில், மீளாய்வு மனுவை தாக்கல் செய்யமுடியும்.

ஆனால்,  ஒரே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியினால் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்ட பின்னர் அந்தக் கட்டளையை அரச சட்டத்தரணி இந்த நீதிமன்றில் மீளாய்வு செய்வது, சட்டவிரோதமான செயலாகும்.

இந்த வழக்கின், இரண்டு எதிரிகளும், வவுனியா மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டு 15 மாதங்கள் கடந்து விட்டன.

கொழும்பு, 6ஆம் இலக்க  மேல் நீதிமன்றில் கணேஷரத்னம் சாந்ததேவனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, தொடர்ந்தும் இந்த நீதிமன்றில் நடத்தாமல், குற்றப்பத்திரிகையை, சட்டமா அதிபர் மீளப்பெற்று, எதிரிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என தனது வாதத்தை முன்வைத்தார்.

இந்நிலையில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி விக்கிரமசிங்க, எதிரியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளமுடியாதென வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளமையை அடிப்படையாகக் கொண்டு, இந்த வழக்கின் இரண்டு எதிரிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரங்களையும் மீளப்பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்தே அவ்விருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அரசியல் கைதிகளின் வழக்குகளை விசாரணை செய்து  வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதியன்று கொழும்பில் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X