2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

இந்தியாவில் ஆளுமை விருத்திப் பயிற்சி

Editorial   / 2026 மார்ச் 20 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

  இலங்கைத் தமிழ் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழ் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கான விசேட ஆளுமை விருத்திப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

  ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில்   இந்தப் பத்து நாள் பயிற்சித் திட்டம் நடைபெற்றது. மார்ச் 9 முதல் 18 வரை தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இப்பயிற்சியில் மொத்தம் 30 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியைச் (TPA) சேர்ந்த 20 பிரதிநிதிகளும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் (ITAK) சேர்ந்த 10 பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 20 பிரதிநிதிகளைக் கொண்ட முதலாவது குழுவினர் இப்பயிற்சியினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDG) உள்ளூர் மட்டத்தில் எவ்வாறு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது என்பது குறித்துப் பிரதிநிதிகளுக்கு நேரடிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக பின்வரும் 9 முக்கிய தொனிப்பொருள்களில் பயிற்சிகள் அமைந்திருந்தன:

  • வறுமையற்ற மற்றும் மேம்பட்ட வாழ்வாதாரப் பஞ்சாயத்துகள்.
  • ஆரோக்கியமான மற்றும் குழந்தைகளுக்கு உகந்த கிராமங்கள்.
  • நீர் தன்னிறைவு மற்றும் தூய்மையான பசுமைக் கிராமங்கள்.
  • தன்னிறைவு பெற்ற உட்கட்டமைப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு.
  • நல்லாட்சி மற்றும் பெண்களுக்கான பிரத்யேகக் கிராமப் பஞ்சாயத்துகள்.

அத்துடன், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, வரவு செலவுத் திட்டமிடல் மற்றும் சூழலுக்கு உகந்த சுற்றுலாத் துறை போன்ற துறைகளிலும் சிறந்த நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

  வெறும் வகுப்பறைப் பயிற்சியாக மட்டுமன்றி, பிரதிநிதிகள் நேரடியாகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள், கூட்டுறவு வங்கிகள், பெண்கள் தலைமையிலான பாற்பண்ணைகள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் நீலகிரியில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் ஆகியவற்றுக்கு இவர்கள் விஜயம் செய்தனர். இது இந்திய - இலங்கை உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இடையிலான அறிவுப் பகிர்வை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

  கடந்த 2025 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிகாரிகளின் ஆளுமை விருத்திக்காக ஆண்டுதோறும் 700 விசேட இடங்களை ஒதுக்குவதாக அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்தப் பயிற்சித் திட்டம் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X