2026 மே 01, வெள்ளிக்கிழமை

’எவரையும் பாதுகாக்கும் தேவை எமக்கு இல்லை’

Editorial   / 2021 மார்ச் 15 , மு.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் பாதுகாப்பதற்கான தேவை எமக்கு இல்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇ தேசிய பாதுகாப்புக்காக எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை; தாக்குதலுக்கு இதுதான் பிரதான காரணமாகும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் அனைத்து இடங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குலுடன் தொடர்புடைய சில அரசியல்வாதிகளின் பெயர்கள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லையென பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,  காலி- ஹிக்கடுவ கலகொட பிரதேசத்தில் நடைபெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் 14ஆவது நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'எமது அரசாங்கத்தின் கீழ் பிரிவினைவாத தீவிரவாதத்துக்கோ, இஸ்லாம் மதவாத தீவிரவாதத்துக்கோ நாம் இடமளிக்கப்போவதில்லை. அரசாங்கம் என்ற ரீதியில் அதனை புறக்கணித்துவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மீது மாத்திரம் இந்தப் பழியைச் சிலர் சுமத்தப் பார்க்கின்றனர். அரசாங்கம் என்றவகையில், தேசிய பாதுகாப்புக்கு உரிய முக்கியதுவம் அவ்வரசாங்கத்தால் கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளதால், அவர்கள் அனைவரும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள். 

அரசியல்வாதிகள் சிலரின் பெயர்கள் இவ்வறிக்கையில் வரவில்லையென பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகை அறிவிப்பொன்றை விடுத்துள்ளார் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அவர்கள் யார் என்பது குறித்து நாம் ஆராய்வோம். ஆனால், பேராயர் கூறும் அரசியல்வாதிகள் எம்மிடம் இல்லை. என்னை அதிகாரத்துக்குக் கொண்டு வரவும், எமது அரசாங்கம் ஆட்சியமைக்கவும் அவ்வாறான அரசியல்வாதிகள் எமக்கு உதவவில்லை. அவ்வாறானவர்கள் எதிர்க்கட்சியில்தான் இருக்கின்றனர்.

எனவே, எமக்கு எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. எவருடனும் 'டீல்' போட வேண்டிய அவசியமும் இல்லை' என்றார்.
இந்த அறிக்கையில் 'எக்ஸ்' எனக் குறிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அரசாங்க புலனாய்வு மூலம் பெறப்பட்ட தகவல்களை வகைப்படுத்தியுள்ளன என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். மேலும் புலனாய்வுப் பிரிவு மற்றும் புலனாய்வுத் தகவல்கள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான சாட்சியங்கள், சாட்சியாளர்களிடமிருந்து இரகசியமாகப் பெறப்பட்டவை என்று தெரிவித்த ஜனாதிபதி, அறிக்கையைப் பகிரங்கப்படுத்தத் தீர்மானிக்கும் முன்னரே, அந்தக் காரணங்கள் குறித்து ஆராய வேண்டும் என்பதை நாம் கௌரவமாகப் பரிந்துரைக்கின்றோம் என்றார்.

அது, வழக்குத் தாக்கல் செய்ய வேண்டிய விடயமல்ல. தேசிய பாதுகாப்புக்கு முக்கியமானவை. அதனால்தான்இ அந்த 'எக்ஸ்' ஆவணங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டாமெனத் தான் தெளிவாகக் கூறியதாகத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமாயின் பயன்படுத்துமாறு சட்டமா அதிபரிடம் அதனை ஒப்படைத்ததாகவும் அது தொடர்பிலும் போலியான விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்தத் தாக்குதலுக்குத் தானும் பசிலும், நிசங்க சேனாதிபதியுமே காரணமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அசோ அபேசிங்க தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவருக்கு தெரிந்த தகவல்களைப் பெறுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும் ஏனெனில் தகவல்களை மறைப்பது குற்றச் செயலென்றும் ஆனால், அவரிடம் சி.ஐ.டியினர் விசாரித்த போது, தனக்கு எதுவும் நினைவில் இல்லையென அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். 

இவ்வாறு தான், தெரியாத, நினைவில் இல்லாத விடயங்களை, மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி கொண்டு செல்கிறது. எதிர்க்கட்சி என்றவகையில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால், அவை உண்மையான தகவல்களாக இருக்க வேண்டும். மக்களை முட்டாள்களாக்கும் தகவல்களாக இருக்கக் கூடாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .