2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

கறுப்புக் கொடி: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விசாரணைக்கு அழைப்பு

Editorial   / 2026 மார்ச் 17 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, கறுப்புக் கொடியை ஏற்றிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் மூவருக்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, பல்கலைக்கழகப் பதிவாளர் ஊடாக இந்த எழுத்துமூல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை ஒரு தொகுதி மாணவர்கள் கீழே இறக்கிவிட்டு, அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர்.

இச்சம்பவம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் மற்றும் காணொளிக் காட்சிகள் சகிதம் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் ஏற்கனவே தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் வாக்குமூலம் வழங்குவதற்காகப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை, மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X