2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

கிறிஸ்தவர்கள் நெற்றியில் குங்குமம் பூசிய விவகாரம்

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிறிஸ்தவ பிரச்சாரம் செய்ய வந்தவர்களில் சிலரை கோயிலுக்கு அழைத்துச் சென்று, நெற்றியில் குங்குமம் பூசி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு செல்லும்படி வற்புறுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெபம் செய்ய சென்றவர்களுக்கு குங்குமம் பூசியதாக எழுந்த புகாரில் நயினார் நாகேந்திரன் உதவியாளர் உட்பட மூன்று பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலிருந்து கடந்த 22ஆம் திகதி, சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்டம் கீழக்கல்லூர் மற்றும் நடுக்கல்லூர் கிராமங்களுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கீழக்கல்லூர் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன், பாஜகவை சேர்ந்த அங்குராஜ் உட்பட 3 பேர் வழிமறித்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அவர்களிடம், இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அனுமதி இல்லாமல் நுழைந்து, மதப் பிரச்சினையை தூண்டும் வகையில் செயல்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், பிரச்சாரம் செய்ய வந்த குழுவினரில் சிலரை அருகிலிருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, நெற்றியில் குங்குமம் பூசி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஆலங்குளத்தைச் சேர்ந்த டேவிட் நிர்மல்துரை என்பவர், கடந்த 22ஆம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “நான் வக்கீலாக உள்ளேன். கிறிஸ்தவ சபைகளில் பிரசங்கம் செய்யும் ஊழியராகவும் இருக்கிறேன். பட்டக்கல்லூரைச் சேர்ந்த சிவபாக்கியம் அழைப்பின் பேரில் கீழக்கல்லூரில் உடல்நலம் குன்றிய அவரது உறவினருக்காக ஜெபம் செய்ய சென்றபோது, எங்களை வழிமறித்த மூவர், கொலை செய்துவிடுவோம் என மிரட்டினர்.

மேலும் எங்களுக்கு வலுக்கட்டாயமாக நெற்றியில் குங்குமம் பூசி, எங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தினர்” என அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், மணிகண்டன் மகாதேவன், அங்குராஜ்,அவரது சகோதரரான சங்கர் ஆகிய 3 பேர் மீது சட்டப்பிரிவுகள் 126(2) (மத அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 299 (கொலை மிரட்டல்), 351(2) (கடமையை செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் சுத்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 3 பேரில் அங்குராஜ், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .