நாட்டில் 4.2 மில்லியன் மக்கள் கொவிட்-19 நோய்த் தாக்கத்தின் அவதானத்துக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவிக்கும் சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை, நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
.
இது தொடர்பாக, ஊடகமொன்றுக்கு மேலும் கருத்துரைத்த அவர், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை கட்டம் கட்டமாகவே நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்து இருப்பதாகவும் அதன்படி, தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கீட்டின்படி 4.2 மில்லியன் பேர் வரையில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் அவதானத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், முதற்கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னரே, அவசியத்தின் அடிப்படையில் அடுத்த கட்டத்தில் உள்ளோருக்கு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
அதேபோல், மக்களின் விருப்பத்தின்படியே இந்தத் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளன என்றும் இங்கிலாந்தில் பயன்படுத்தப்படுகின்ற 'பைஸர் பயோ எண்டிக்' வகை தடுப்பூசிகளை, ஆகக்குறைந்த வெப்பநிலையில் வைத்துப் பாதுகாப்பது அவசியமென அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட 'மொடோனா' தடுப்பூசிகள், அமெரிக்காவைத் தவிர வேறு நாடுகளுக்கு வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளதால், அதனைப் பெற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஒக்ஸ்போடில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியையும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'ஸ்புட்ணிக் 5' என்ற தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, பெரும்பாலான தடுப்பூசிகள், 95 சதவீதம் பாதுகாப்பானவை என்ற உறுதிப்படுத்தல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இவற்றில், 'பைஸர்' தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டால், அவற்றைப் பாதுகாப்பது கடினமாக இருக்குமென்ற போதிலும், அவசியத்தின் பிரகாரம் தேவையான அளவு தடுப்பூசி வகையை, நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
எவ்வாறாயினும்இ தடுப்பூசிகளை நாட்டுக்குக் கொண்டு வரவுள்ள சரியான கால எல்லையைஇ உறுதியாகக் கூற முடியாதெனத் தெரிவித்த அவர்இ மார்ச் மாதமளவில் அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்படலாம் என்றும் எதிர்வு கூறினார்.