2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

சிகிச்சைக்கு சென்ற தாயை கடித்த கட்டாக்காலி: குழந்தையும் படுகாயம்

Editorial   / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்ட வைத்தியசாலைக்குத் தனது குழந்தைக்குச் சிகிச்சை பெறுவதற்காகச் சென்ற இளம் தாய் ஒருவர், அங்கு நின்ற கட்டாக்காலி நாய் கடித்ததில் காயமடைந்து அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் துர்ப்பாக்கியச் சம்பவம் புதன்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளது. புத்தளம் - மன்னார் வீதி, சோல்டன் பகுதியில் வசிக்கும் இளம் தாய் ஒருவரே இவ்வாறு நாய்க்கடிக்கு உள்ளானவர் ஆவார்.

சம்பவத்தின்போது, நாய்க்கடிக்குப் பயந்து தாய் ஓடிய நிலையில், அவரிடமிருந்த குழந்தை தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளது. இதனையடுத்து, அக்குழந்தையும் சிறுவர் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தாய், வைத்தியசாலை அத்தியட்சகரிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நீண்டகாலமாக நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர சபையின் முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹமட் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இணைந்து, நாய்களின் தொல்லையை ஒழிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாகப் புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹமட்டிடம் வினவியபோது:

"புத்தளம் தள வைத்தியசாலை எமது ஆட்சிக்காலத்தில் மாவட்ட வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட பின்னர், அதனைச் சூழச் சுற்றுமதில் அமைப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்துள்ளோம். இதன் மூலம் கட்டாக்காலி நாய்களின் தொல்லையை முற்றாக ஒழிப்பதே எமது நோக்கமாகும். எமது சுற்றுமதில் திட்டம் தற்போது சற்றுத் தாமதமாகி வருகின்றது. இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசலுடன் இணைந்து, கூடிய விரைவில் இதற்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருவோம்." என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .