2025 மே 01, வியாழக்கிழமை

சம்பிக்கவுக்கு எதிரான வழக்குக்கு திகதி குறிப்பு

Janu   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து மற்றும் ஆதாரங்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வெலிக்கடை பொலிஸ் நிலையக பொறுப்பதிகாரியாக பணியாற்றிய உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சுதத் அஸ்மடல  உட்பட மூவருக்கு எதிரான வழக்கை ஜூலை 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.

2016 பெப்ரவரி 28, அன்று விபத்து நடந்த நேரத்தில்,   வாகனத்தின் ஓட்டுநர் திலும் துசித குமார என்பதைக் குறிக்கும் வகையில் பொய்யான ஆதாரங்களை உருவாக்க சதி செய்ததாகவும், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து பாதுகாக்க ஆதாரங்களை அழிக்க சதி செய்ததாகவும் மூன்று பிரதிவாதிகள் மீதும் சட்டமா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து பாதுகாப்பதற்காக, நீதவான் நீதிமன்றத்தில் தவறான அறிக்கையை சமர்ப்பித்ததற்காக,  வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய, பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய    உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் சுதத் அஸ்மடல மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஜீப் வாகனத்தை ஓட்டிச் சென்றதை அறிந்து, தான் அந்த வாகனத்தின் ஓட்டுநர் என்று நீதவான் நீதிமன்றத்தில் பொய்யாகக் கூறியதற்காக, பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாகச் செயல்பட்ட திலும் துசித குமார மீது சட்டமா அதிபர் தனி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மூவருக்கு  எதிராக 16 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் முன்வைத்துள்ளார். இந்த வழக்கு, புதன்கிழமை (30) விசாரணைக்கு வந்தபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

வழக்கு அழைக்கப்பட்டபோது, ​​பிரதிவாதி பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, சாட்சியங்களை முன்வைத்து, சட்டமா அதிபர் வழக்கை தாக்கல் செய்த விதம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு மீதான முடிவு இன்னும் கிடைக்கப்பெறாததால், வழக்கை ஒத்திவைக்குமாறு கோரினார்.

உண்மைகளை பரிசீலித்த நீதவான், வழக்கை ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .