2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சித்திரவதையை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை

Thipaan   / 2016 ஜனவரி 27 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறலற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டுவர, இலங்கை அரசாங்கத்தால் குறிப்பிடத்தக்களவு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அக்கண்காணிப்பகத்தின் 2016ஆம் ஆண்டுக்கான உலக அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்த அறிக்கை எழுதப்படும் நேரத்தில், மிகக்கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் அரசாங்கம் நீக்கியிருக்கவில்லை. அதை நீக்குவதற்கான வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், அச்சட்டத்தின் கீழ் மக்களை, தொடர்ந்தும் தடுத்து வந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சட்டத்தில், சித்திரவதையைத் தடுப்பதற்கான சட்டம் இருக்கின்ற போதிலும், சித்திரவதையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அவர்களது உயரதிகாரிகளுக்கும் எதிராக, ஒழுக்கவியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அரசாங்கம் தவறிவிட்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட பலர், தொடர்ந்தும் பணியில் இருப்பதாகவும், இல்லாவிடில், வேறெந்த பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்கடித்து, புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர், ஊடகங்கள், சிவில் அமைப்புகள் மீதான கண்காணிப்பையும் தணிக்கையையும் இல்லாது செய்ததோடு, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்வதற்கான அரசியலமைப்புச் சீர்திருத்த நடவடிக்கைகளையும் எடுத்ததோடு, நீதித்துறையின் சுயாதீனத்தை மீளக்கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்ததை, அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.

அத்தோடு, ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு மாறாக, மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட சர்வதேச சமூகத்துடன், திறந்த கலந்துரையாடலுக்கும், புதிய அரசாங்கம் முன்வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இன்னும் அதிகமான பணிகள் ஆற்ற வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டோரின் விடுதலை தொடர்பாகப் போதிய நடவடிக்கைகளை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X