2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் இல்லை’

Princiya Dixci   / 2022 மே 27 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

“தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் இல்லை” எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், “பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டை மோசமான பொருளாதார நெருக்கடி தாக்கியிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதை நிகழ்த்தியவர்கள், அதற்குப் பொறுப்பானவர்கள் அரசாங்கத்தில் தற்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

“இதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்னும் பதவி விலகவில்லை. ஜனாதிபதி உடனடியாக அவராகவே பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும். இந்த நிலைமைக்கு கோட்டாபய ராஜபக்ஷ முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

“ஜனாதிபதி கோட்டாபய பொறுப்பேற்ற உடனேயே கொண்டுவந்த வரிச் சலுகைகள் தான் இந்த நிலைமை உருவாவதற்கு முக்கிய காரணம் ஆகும். அவ்வாறான வரிச் சலுகையை கொண்டு வருவேன் என தேர்தலுக்கு முன்னரே கோட்டாபய அறிவித்திருந்தார்.

“அப்போது நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீர இவ்வாறான வரிச் சலுகை இலங்கையில் அமுல்படுத்தப்பட்டால், இலங்கை லெபனான் போலவும் வெனிசூலா போலவும் மாறும் எனக் கூறியிருந்தார். அதனையே நாம் தற்போது அனுபவிக்கின்றோம்.

“மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பதிலாக ரணில் அமர்ந்திருக்கின்றார். ராஜபக்‌ஷ எங்கும் போகவில்லை. ராஜபக்‌ஷவின் ஆட்சியே தற்போது நடக்கிறது. இந்நிலைமை மாறாமல், பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை மீளமுடியாது. மக்களை ஏமாற்றாமல் பொறுப்பானவர்கள் பதவி விலகி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .