2026 மே 13, புதன்கிழமை

dd

தவெக செயலை சரமாரியாக கலாய்த்த உதயநிதி

Janu   / 2026 மே 13 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இதன்போது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு மீது அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன் ஒரு சில இடங்களில் சரமாரியாக தவெக செயலை கலாய்த்துள்ளார்.

அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி: “புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களில் இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். த.வெ.க. ஆட்சியமைக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் 1.72 கோடி மக்கள் மட்டுமே உங்களுக்கு வாக்களித்துள்ளனர்; ஆனால் 3.23 கோடி மக்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதாவது 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி இது.”

திட்டங்கள் முடக்கம் குறித்த விமர்சனம்: “65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த அரசு மீது, உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே நம்பிக்கை குறைந்து வருகிறது. தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15-ஆம் தேதி உரிமைத் தொகைக்காக மகளிர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், கடந்த 7-ஆம் தேதி சென்றிருக்க வேண்டிய ‘தமிழ்ப் புதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களுக்கான தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. காலை உணவுத் திட்டம் அடுத்த மாதம் முறையாகத் தொடங்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”

“இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சி”: “இந்த ஆட்சி வெறும் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ ஆட்சியாக மட்டும் இருக்கக் கூடாது. த.வெ.க. ஆட்சியைத் தொடர தி.மு.க. தடையாக இருக்காது. ஆனால், முதலமைச்சர் விஜய் அவர்கள் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றிகூடத் தெரிவிக்காமல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வெற்றி குறித்து நம்பிக்கை இல்லாத காரணத்தால் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அவர், இன்னும் அந்தத் தொகுதி மக்களுக்கு நன்றிகூடத் தெரிவிக்கவில்லை.”

எம்.எல்.ஏ.க்கள் குறித்த சர்ச்சை: “த.வெ.க-வுக்கு தற்போது 106 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. தி.மு.க. கூட்டணிக் கட்சியின் ஆதரவுடன்தான் த.வெ.க. ஆட்சியமைத்துள்ளது. இது பெரும்பான்மைக்கு போதுமான எண்ணிக்கை அல்ல. எம்.எல்.ஏ-க்களைக் கடன் வாங்கி ஆட்சி செய்யும் இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதிலும் ஒரு கட்சி தலைவருக்கு தெரியாமலே.. அந்த கட்சி எம்எல்ஏவை உங்க கட்சிக்கு ஆதரவு தர வைத்தீர்கள்.. நான் ரொம்ப டீசண்ட்டாக சொல்கிறேன்.. இதெல்லாம் டீசண்ட் வெர்ஷன்.. என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சபையில் ஏற்பட்ட பரபரப்பு: உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு கூறியதும், அவர் தன்னைக் குறிப்பிடுவதாக எண்ணி அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே உதயநிதி ஸ்டாலின், “நான் உங்களைச் சொல்லவில்லை” என்று பதிலடி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் பிரபாகர் தலையிட்டு, காமராஜை அமருமாறு அறிவுறுத்தினார். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .