2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தெளிவுபடுத்தமுடியாது தடுமாறினார் அமைச்சர்

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

ஆகக்குறைந்த தண்டப்பணமாக முன்மொழியப்பட்டுள்ள 2,500 ரூபாய் தொடர்பில், தெளிவுபடுத்த முடியாமல், அமைச்சர் தட்டுத்தடுமாறி பதிலளித்துகொண்டிருக்க, ஏனைய அமைச்சர்கள் இருவரும் அமைதியாகவே இருந்துவிட்டனர்.  

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், ஆகக்குறைந்த தண்டப்பணம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை, கோப் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் கேள்விகளைத் தொடுத்தனர்.  

நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம் மற்றும் லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.  

அப்போது ஊடகவியலாளர்கள், “குறைந்தபட்ச தண்டப்பணமாக வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள 2,500 ரூபாய் என்ற தொகையானது, எந்தெந்தப் போக்குவரத்து ஒழுங்குவிதி மீறல்களுக்கானது?” என்று வினவியதோடு, இந்த அரசாங்கமானது, அறிவிப்பை விடுத்துவிட்டு, அவ்வறிப்பை மீளப்பெற்றுவது அல்லது திருத்துவது இது முதல்தடவையல்ல என்று சுட்டிக்காட்டியதுடன், அறிவிப்பை விடுக்கும்முன்னர் அதன் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஆராய்ந்து அறிக்கைவிடமுடியாதா என்றும் வினவினர்.  

மேற்படி தண்டப்பணத்துக்கான ஒழுங்குவிதி மீறல்கள் பற்றிய விவரங்கள் எவற்றையும் இதற்குப் பதிலாக வழங்காத அமைச்சர் கயந்த கருணாதிலக, போக்குவரத்து சட்டத்தை மீறுவோருக்கு எதிராகவே இந்த தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.   

அத்துடன், இந்த விடயம் பற்றிய கேள்விகளை எழுப்பி உரிய தெளிவுகளை பெற்றுக்கொள்ள பிறிதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும் அவர் இதன்போது கூறினார்.  

“வாகன போக்குவரத்தின் போது வீதியின் நடுவில் இருக்கும் கோட்டின் குறுக்கே செல்வதற்காக இந்த தண்டப்பணம் விதிக்கப்படப் போவதில்லை. வீதி பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது. நாளொன்றுக்கு 8-10 உயிர்கள் பலியாகின்றனர். மக்களின் உயிரை பாதுகாப்பதன் நிமித்தமாகவே இந்த தண்டப்பணம் விதிக்கப்படுகிறது”
என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .