2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நான் டீ.ஐ.ஜி.யாக இருந்தால் விமலுக்குச் சிறைதான்

Thipaan   / 2016 பெப்ரவரி 03 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாநூ கார்த்திகேசு

'நான், பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்திருந்தால் விமல் வீரவன்சவையே முதன்முதலில் கைது செய்திருப்பேன்' என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்றுப் புதன்கிழமை (03) தெரிவித்தார்.

பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'விமல் வீரவன்ச, தேசிய வீட்டமைப்பு  மற்றும் கட்டட நிர்மாண அமைச்சராக இருந்த காலத்தில், வீடமைப்பதற்கென ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து  ஆறு வீடுகளை நிர்மாணித்து, அதில் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி பாரியாரான ஷிரந்தி

ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரது பெயரில் பதிவு செய்துள்ளதுடன்;, மற்றைய ஐந்து வீடுகளையும் தனது உறவினர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்துள்ளார்' என்றார்.

இதேவேளை, கார்ல்டன் என்பது ராஜபக்ஷ குடும்பத்தின் அடையாளப் பெயராக இருக்கின்ற நிலையில், கார்ல்டன் அலைவரிசை மாத்திரம் எவ்வாறு அவர்களது  இல்லை எனக் கூறுவார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கார்ல்டன் வீடு மஹிந்த ராஜபக்ஷவினது,கார்ல்டன்; ஆரம்ப பாடசாலை அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவினது, கார்ல்டன் றக்பி விளையாட்டுத்திடல் நாமல் ராஜபக்ஷவினது, கார்ல்டன் அலைவரிசை யாருடையது என்றால்? பதிலில்லை.  கார்ல்டன்; அலைவரிசையானது யோஷிதவின் பெயரினால் நடத்திச் செல்லப்பட்டது.

அந்த அலைவரிசையில் பணியாற்றிய பணியாளர்கள் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றிய ஊழியர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தொலைக்காட்சிக்கென சிங்கப்பூரிலிருந்தும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கென, அரச திறைசேரியிலுள்ள பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

நடப்பது அரசியல் பழிவாங்கல் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு பேட்டியளிக்கின்றார். ஆனால், இது அரசியல் பழிவாங்கல் அல்ல. கடந்த காலத்தில், சரத் பொன்சேகா, அவரது செயலாளர் சேனக, ஷிராணி பண்டார நாயக்க மீது மேற்கொள்ளப்பட்டவை தான் உண்மையில் அரசியல் பழிவாங்கல்கள் எனவும் அநுர தெரிவித்தார்.

இதில் கண்ணீர் விடுவதற்கோ, கதறி அழுவதற்கோ எதுவும் இல்லை. கார்ல்டன்; அலைவரிசையை அமைப்பதற்கும் அதனை நடத்திச் செல்வதற்குமான நிதி எங்கிருந்து கிடைக்கப்பெற்றது.  என்பதற்கு நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கும் சட்டத்துக்கும் மக்களுக்கும் பதிலளிக்க வேண்டும்.

இது அரசியல் பழிவாங்கல் அல்ல. தனிப்பட்ட சொத்தை களவாடிய விடயமல்ல. மக்களின் அபிவிருத்திக்கெனப் பயன்படுத்தப்பட பணத்தினை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியுள்ளனர். அதற்குப்  பதிலளிப்பதற்கான நேரமே இதுவென அவர் மேலம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X