2025 ஜூன் 09, திங்கட்கிழமை

நாமலுக்கு எதிரான சாட்சிகளை முன்னிலைப்படுத்த ஏற்பாடு

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதிச் சலவைக் குற்றச்சாட்டின் பேரில் கைதாகிப் பிணையில் விடுதலை செய்யப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு

 எதிரான சாட்சியங்களை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை அறிவித்தது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாயினை, தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கு விசாரணையில், நாமல் எம்.பியும் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, மன்றில் ஆஜராகியிருந்த பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், கார்ல்டன் சுப்பர் நெட்வேர்க் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் பணியாற்றிவரும் சுஜானி போகொல்லாகமவிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதிச் செலவு தொடர்பான அறிக்கையின் பிரகாரம், மேற்படி 70 மில்லியன் ரூபாய்க்கான செலவு விவரங்களை, ரொனி ஏப்ரஹேம், ருக்ஷான் பெர்ணான்டோ ஆகியோர் அறிந்துள்ளமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகக் கூறினர்.

இந்நிலையில், அவ்விருவரிடமும் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில், றக்பி விளையாட்டுக்களுக்காக மைதானங்களை ஒதுக்கியமை தொடர்பான அறிக்கைகளையும் பெற்று, நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினர்.

மேற்படி க்ரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட நிதியைக் கொண்டு, புத்தளம் பிரதேசத்தில், போலி ஆவணங்களைத் தயாரித்து, 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றைக் கொள்வனவு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், சுற்றுலாச் சபையின் முன்னாள் தலைவர் நாலக்க கொடஹேவா உள்ளிட்ட நால்வர் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீதவானிடம் தெரிவித்தனர்.

இவ்விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், இவ்வழக்கு விசாரணையை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதியன்று, மேற்படி விவகாரம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்த நாமல் ராஜபக்ஷ, அங்கு கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 5