2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

மாத்தறைக்கு உடன் நிவாரணம் வழங்க பணிப்புரை

Janu   / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய மாத்தறை மாவட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு   நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலான அவசர சந்திப்பொன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தலைமையில் மாத்தறை மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்றது. 

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அந்த மக்களுக்கு அவசியமான சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை குறைவின்றி வழங்குமாறும் அதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினர்களுக்கு அறிவித்துள்ளார்.

வெள்ளம், பலத்த காற்று, மண் மேடுகள் இடிந்து விழுதல், கடும் மழை, பாறைகள் சரிதல் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மாத்தறை மாவட்டத்தின் 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் இதுவரை 2350 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 9448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 399 ஆகவும், ஏனைய சொத்து சேதங்கள் 37 ஆகவும் பதிவாகியுள்ளன.

மாலிம்பட, அகுரெஸ்ஸ, கம்புருபிட்டிய, திஹகொட ஆகிய பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ள உணவு தயார்படுத்தல் நிலையங்களில் அவர்களுக்காக சமைத்த உணவு வழங்கப்படுகிறது. 6967 குடும்பங்களைச் சேந்த 25,553 பேர் வெள்ளத்தில்  சிக்கியுள்ளதோடு அவர்களுக்கு இராணுவம் சமைத்த உணவை வழங்கி வருகிறது.வெள்ளத்தினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள மாலிம்பட பிரதேச செயலக மக்களுக்காக விசேட நிவாரணத் திட்டமொன்று இராணுவத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.

அவசரகால நிலைமைகளில் மக்களை மீட்பதற்காக மோட்டார் படகுகள் மற்றும் இராணுவ சிறப்பு வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான தகவல்களை மேஜர் ஜெனரல்  ஜனக ரணசிங்க (0766907042) கேர்ணல் ரொஷான் கண்ணங்கர (0766907146) ஆகியோருக்கு  தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X