2026 மே 19, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு மாதாந்தம் ரூ.10,000

Editorial   / 2026 மே 19 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகள் பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களில் (Day Care Centers) சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலையீட்டுடன் எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்சன ஆகியோரின் தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போதே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் இந்த விபரங்களை வெளியிட்டனர்.

$400 டொலர் வருமானம் பெறுவோருக்கு மாதாந்தக் கொடுப்பனவு

சிறு குழந்தைகள் உள்ள பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதனால் சமூகத்தில் எழும் பல்வேறு பிரச்சினைகளில் தலையிடுமாறு, இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளருக்குப் (உள்நாட்டு விவகாரங்கள்) பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. அப்பரிந்துரைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

இதற்கமைய, வெளிநாடுகளுக்குப் பணியாற்றச் சென்றுள்ள பெற்றோரின் மாதாந்த வருமானம் 400 அமெரிக்க டொலராக ($400) அல்லது அதற்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே, அவர்களின் 2 வயது முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளுக்கு இக்கொடுப்பனவு ஏற்புடையதாகும். இத்திட்டத்தை முதற்கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக 10 மில்லியன் ரூபாய் (ரூ. 10,000,000) ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இதற்கான இறுதி அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதன் பின்னர், மாவட்டச் செயலகங்களின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களுக்கு இம்மாதாந்தக் கொடுப்பனவை நேரடியாக வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மிகவும் சாதகமான இந்த நலன்புரித் திட்டம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பரந்தளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதன்போது வலியுறுத்தினார்.

பொலிஸ் துறையில் பெண் அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள்

இதற்கு முந்தைய குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு இணங்க, பெண் பொலிஸ் அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதன்படி, முதற்கட்டமாக 50 பெண் பொலிஸ் பரிசோதகர்களையும் (WIP), 2,600 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் (WPC) இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பது இக்கூட்டத்தில் தெரியவந்தது. அத்துடன், தமிழ் மொழியில் பேசக்கூடிய பெண் பொலிஸ் அதிகாரிகளைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்காகச் சமூக ஊடகங்களின் ஊடாக விசேட பிரச்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் தமிழ் பேசும் குடும்ப நல சுகாதார சேவையாளர்களின் (Midwives) கடுமையான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இவற்றை நிவர்த்தி செய்வது குறித்து உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சையில் தோற்றிப் சித்தியடைந்த தமிழ்மொழி மூல மாணவர்களை இத்துறையில் இணைத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய டிஜிட்டல் தகவல் கட்டமைப்பு

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) மற்றும் ஏனைய நிறுவனங்களின் கீழ் உள்ள இந்நாட்டுச் சிறுவர்கள் பற்றிய அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய ‘தேசிய தகவல் கட்டமைப்பொன்றை’ (National Data System) தயாரிப்பதன் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் முழுமையான தலையீட்டுடன் இத்தகவல் கட்டமைப்பைத் தயாரிக்கும் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வருட இறுதிக்குள் (2026) இப்பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஒன்றிணைந்த குழுவும் அவசர இலக்கமும்

சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட ரீதியான நீதியை விரைவாக நிலைநாட்டுவதற்கும், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மறுவாழ்வு மற்றும் பிந்திய சூழ்நிலைகளைச் சரியாக முகாமைத்துவம் செய்வதற்கும் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இக்குழு வலியுறுத்தியது.

இதற்கமைய, பிரதேச செயலகங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் இலங்கை பொலிஸ் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர் நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் ‘ஒன்றிணைந்த விசேட குழுவை’ (Task Force) மாவட்ட மட்டத்தில் அமைத்துச் செயற்படுத்த வேண்டும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அல்லது ஏனைய வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை விசேட அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பொதுமக்கள் அறிவிக்க முடியும். அத்துடன், வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் தனிப்பட்ட முறையில் தனக்கும் இத்தகைய புகார்களை அனுப்ப முடியும் என்றும், அவை குறித்துத் தான் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இலவசக் காலை உணவு

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரித்தல், அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவை இலவசமாக வழங்குதல் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பங்களிப்புடனான ஓய்வூதியத் திட்டத்தை (Contributory Pension Scheme) அறிமுகப்படுத்துதல் ஆகிய முக்கிய முன்மொழிவுகளை, அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் (Budget 2027) சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கச் சேவையில் உள்ள பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் இடமாற்ற நடைமுறைப் பிரச்சினைகள், முன்பள்ளிகள் மற்றும் பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் சார்ந்த பிரச்சினைகளை ஆராய்ந்து, உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு குழுவின் தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.ரி. வீரசிங்க உள்ளிட்ட உயர்தர அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X