2025 மே 16, வெள்ளிக்கிழமை

சு.க ஊடகவியலாளர் மாநாட்டில் நஞ்சுப் போத்தல்களுடன் விளக்கம்

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(04) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் ஐந்து நஞ்சுப் போத்தல்களை காண்பித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா அந்த நஞ்சுபோத்தல்களை யார் குடிக்கவேண்டும், இல்லையெனில் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, மேல் மாகாண சபையின் உறுப்பினர் உதய கம்பன்பில, ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் சரித்த ஹேரத் ஆகியோர் பங்கேற்றனர்.

'அதிவேக நெடுஞ்சாலைக் கொள்ளை' எனும் தொனிப்பொருளிலேயே இந்த ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய முன்னாள் எம்.பியான டிலான் பெரேரா, நாங்கள் 'வடக்கு அதிவேக நெடுஞ்சாலை' எனும் பெயரில் அறிமுகப்படுத்திய அதிவேக நெடுஞ்சாலையை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'மத்திய அதிவேக நெடுஞ்சாலை' என்று பெயரை மாற்றி ஆரம்பித்து வைத்துள்ளார்.

இவ்வாறான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்க முடியும் எனினும், அவ்விடத்தில் உரையாற்ற முடியாது. வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு வேட்பாளர், அவர் உரையாற்றியமை தேர்தல் சட்டங்களை மீறுகின்ற செயலாகும். இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோம் என்றார்.

'வடக்கு, கிழக்கை இணைத்து புதிய நாடொன்றை அமைக்கும் முயற்சியிலேயே இந்த நெடுஞ்சாலைக்கு மத்திய அதிவேக நெடுஞ்சாலை பெயரிடப்பட்டுள்ளது. நாம் முன்னெடுக்கவிருந்த இந்த நெடுஞ்சாலைக்கு செலவாகும் தொகையை விட குறைவானதாகும் என்று பிரதமர் கூறியமை பொய்யானதாகும்' என்றும் அவர் கூறினார்.

நஞ்சுப் போத்தல்கள் சிலவற்றை கொண்டுவந்திருந்த அவர், ஒவ்வொரு போத்தல்களாக எடுத்து காண்பித்து அவற்றுக்கு விளக்கங்களும் அளித்தார்.

அதிலொன்று, மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய பிணை முறி முறைக்கேடுக்கு ஒத்துழைப்பு நல்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்றார்.

மற்றொன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு, பாரிய மோசடியில் ஈடுபட்ட மத்திய வங்கியின் ஆளுநருக்கு மற்றொன்று, அதிர்ஷ்ட இலாப சீட்டு முறைமையை அறிமுகப்படுத்திய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஒன்று, மணல் வர்த்தகத்தை பெற்றுகொடுத்த ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோவுக்கு ஒன்று வழங்குவது உசிதமானது என்றார்.

மக்களின் நிதியை கொள்ளையடித்தவர்ளே நஞ்சருந்துங்கள் என்றுரைத்த மாதுலுவாவே சோபித்த தேரரை சந்தித்து அந்த நஞ்சு போத்தல்களை கொடுத்து மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு பருகக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .