2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண மாணவர்களை பாராட்டுகின்றேன் : தண்டாயுதபாணி

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,எஸ்.சசிக்குமார்  

தேசிய மட்ட கணித வினாவிடைப் போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் கனிஷ்ட பிரிவிலும், சிரேஷ்ட பிரிவிலும் முதலிடத்தைப் பெற்று எமது மாகாணத்துக்கு பெருமை சேர்த்திருக்கின்றார்கள். இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தமைக்காக இம்மாணவர்களை மனமாரப் பாராட்டுகின்றேன் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இம்மாணவர்களை வழிநடத்திய ஆரிசியர்கள், அதிபர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்;, மாணவர்களது பயிற்சிக்கு பொறுப்பாக இருந்த கல்வி அலுவலர்கள் யாவரையும் பாராட்டுகின்றேன்.  

ஒவ்வொரு வருடமும் மாகாண மட்டத்தில் தெரிவுகளை நடத்தி தேசிய மட்டப் போட்டிக்கு சிறந்த மாணவர்களை மாகாண கல்வித் திணைக்களம் அனுப்பி வைக்கின்றது. கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் கனிஷ்ட பிரிவில் எமது மாணவர்கள் முதலாம் இடத்தையும், சிரேஷ்ட பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் எமது மாகாணம் இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்டது.இவ்வருடம் இரண்டு பிரிவுகளிலும் முதலாம் இடத்தைப்பெற்று தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டது. இது கல்விப்புலம் சார்ந்த எல்லோருக்கும் பெருமை தரக்கூடிய விடயமாகும்.

குறித்த ஒரு வருடத்தில் இரண்டு பிரிவுகளிலும் ஒரே மாகாணம் முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல் தடவையாகும். கனிஷ்ட பிரிவில் ஒன்பது மாணவர்களும் சிரேஷ்ட பிரிவில் எட்டு மாணவர்களும் பங்குபற்றி தங்கப்பதக்கம் பெறும் சாதனையாளர்களாகத் திகழ்கின்றார்கள்.

எமது பாடசாலைக் கலைத் திட்டத்தில் கணித பாடம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. உயர் கல்வி நோக்கி செல்கின்ற மாணவர்களுக்கு  கணித பாடத்திலான தேர்ச்சி அவசியமானதாகும். கணித பாடத்தில் மாணவர்களுடைய அறிவு மட்டத்தை விருத்தி செய்வதற்கான மேலதிக செயற்திட்டங்களை கல்வி அலுவலர்கள் செயற்படுத்த வேண்டியது அவசிமானதாகும். அந்த வகையில் இக்கணித வினாவிடைப் போட்டி வலய, மாகாண, தேசிய மட்டங்களில் செயற்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

கல்விச் செயற்பாடுகளில் எமது மாணவர்கள், ஆசியர்கள், பெற்றோர், கல்வி அலுவலர்கள் யாவரும் இணைந்து செயற்படுவதன் மூலமாக இவ்வாறான வெற்றிகளை எதிர்காலத்திலும் பெறவேண்டுமென்று வாழ்த்துகின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .