2026 மார்ச் 23, திங்கட்கிழமை

'15 வீதமான சிறுவர்களே பாலர் பாடசாலைக்கு செல்கின்றனர்'

Niroshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 15 வீதமான பிள்ளைகளையே பெற்றோர் பாலர் பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர் இது கவலையளிக்கும் விடயம் என வெருகல் பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார்.

வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்பூட்டும் கூட்டம் திங்கட்கிழமை வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

பாடசாலைக் கல்வி என்பது சிறார்களின் உரிமையாகும்.இதனை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்பப் பிரிவு வகுப்புக்களுக்கு மாணவர்களைக் கட்டாயம் அனுப்ப வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும் இருக்கின்றது.

பாடசாலைக்குச் செல்ல வேண்டிய பருவத்தில் பிள்ளைகளை தமது சொந்த அலுவல்களுக்காகவும் தொழில்களுக்காகவும் பயன்படுத்தும் பெற்றோருக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையிட்டு பெற்றோர் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

இந்தப் பிரதேச செயலகப் பிரிவில் கல்விக்கான பாடசாலைகள், ஆசிரியர்கள், மற்றும் போக்குவரத்து உட்பட சகல வசதிகளும் உள்ளன.

இதற்கும் மேலதிகமாக இலவச பாடசாலைப் புத்தகங்கள், இலவச சீருடைத்துணி, இலவசக் கல்வி என்பனவற்றை அரசு வழங்குகின்றது.அரச சார்பற்ற நிறுவனங்களும் கல்விக்காக உதவுகின்றன.

எனவே, இந்த வாய்ப்பை பெற்றோர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்வருகின்ற 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தரத்துக்குச் சேர்ப்பிக்கின்ற வயதையடைந்த எந்தப் பிள்ளையையும் பாடசாலைக்குச் சேர்ப்பிக்காது பெற்றோர் வீட்டில் வைத்திருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதேச செயலக அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .