2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பிரெஞ்சு பிரஜைகள் மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

Super User   / 2012 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி எம்பேக்கே தேவாலயத்தில் புத்தர் சிலைகளுக்கு முன்னால் ஒழுங்கீனமான முறையில் போஸ் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சு பிரஜைகள்  மூவருக்கு காலி நீதவான் நீதிமன்றம்  5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் தலா 1500 ரூபா அபராதமும் விதித்தது.

மேற்படி மூவரின் இருவர் பெண்களாவர். கிறிஸ்டினா மார்கரிட்டா, ஜோர்ஜ், எமிலி ஆகிய மூவரும் காலி பொலிஸாரினால் காலி பிரதம நீதவான் யூ.எஸ். கலன்சூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கண்டியிலுள்ள எம்பேக்கே தேவாலயத்தில் புத்தர் சிலையை கட்டித்தழுவியவாறும் முத்தமிட்டவாறும் புகைப்படம் எடுத்துக்கொண்ட இச்சுற்றுலா பயணிகள் மூவரும் பின்னர் காலிக்கு சென்று அங்குள்ள புகைப்படப்பிடிப்பு நிலையமொன்றில் படங்களை அச்சிட முயன்றனர். இப்புகைப்படங்களை அவதானித்த அந்நிலையத்தின் முகாமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதையடுத்து காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் குணவர்தன தலைமையிலான பொலிஸார் இச்சுற்றுலா பயணிகளை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இச்சுற்றுலா பயணிகள்  சார்பில் ஆஜரான வழக்குரைஞரின் கோரிக்கையைடுத்து, அவர்களின் கமெராக்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. எனினும் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் அழிக்கப்பட்டன. (டி.ஜி. சுகதபால, கிரிஷான் ஜே.ஜயருக்)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .