Kogilavani / 2017 நவம்பர் 28 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}








எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆ.ரமேஷ்
மஸ்கெலியா, கவரவில தோட்டம் பாக்றோ தோட்டத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி காணாமற்போன எஸ்.மகேந்திரன் (வயது 28), பி.மகாலெட்சுமி (வயது 19) ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கவரவில ஆற்றிலிருந்தே, அவ்விருவரும் இன்று (28) மாலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளரென, கவரவில பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா, கணேமுல்ல பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்து வந்த மேற்படி இருவரும் அவர்களது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவுக்காக, கடந்த 23ஆம் திகதி, கெப்ரக வாகனத்தில் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், அலைபேசியொன்று காணாமல் போனமைத் தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு செய்யச் செல்வதாகக் கூறி, கடந்த 26ஆம் திகதி, வீட்டிலிருந்து சென்ற அவ்விருவரும், இதுவரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி இருவரும் காணாமல் போனமை தொடர்பாக உறவினர்கள், பொலிஸில் திங்கட்கிழமை (27) முறைப்பாடும் செய்துள்ளனர்.
இதேவேளை, இவர்கள் பயணித்த கெப் ரக வாகனம், கவரவில சிங்கள பாடசாலைக்கு அருகில் நிற்பதாக இன்றுக் காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள், மேற்படி இருவரின் உறவினர்களுக்கும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், கெப் ரக வாகனம் மற்றும் அதிலிருந்து மேற்படி இருவரும் அணிந்திருந்ததாகக் கூறப்படும் ஆடைகள், காலணிகள் மற்றும் கைக்குட்டை என்பனவற்றை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சுழியோடிகள் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஜொனி என்ற மோப்ப நாயின் உதவியுடன் மேற்படி இருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .