-கே.எல்.ரி. யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கமைய இன்று வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், கடல் தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் ருக்சான் குருஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் நாகலிங்கம் சசிநந்தன், அதிகாரிகள், விவசாயிகள், மீனவர்களின் பிரசன்னத்துடன் வெட்டப்பட்டது.
முகத்துவாரம் வெட்டப்பட்டதையடுத்து மீனவர்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நீரினால் பாதிக்கப்படும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்ட நிருவாகத்திடம் விவசாயிகள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட:டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு முகத்துவாரமானது, ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தின் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்காக வெட்டப்படுவது வழமையாகும். இவ்வாறு வெட்டப்படும் முகத்துவாரமானது நீர் வழிந்தோடிய பின்னர், இயற்கையாகவே மூடிக் கொள்ளும்.
மாவட்டத்தில் வெள்ள நீர் அதிகரிக்கும் நிலை ஏற்படும் போது மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, கடல் தொழில் நீரியல் வளத்திணைக்கம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இணைந்து எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முகத்துவாரம் வெட்டப்படுவது வழமையாகும்.