2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஊக்கமருந்துச் சோதனை முறைகேடு: சிக்கினார் கென்ய தடகள முகாமையாளர்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 07 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலிம்பிக் போட்டிகளின்போது வீரர்களிடத்தே மேற்கொள்ளப்படும் ஊக்கமருந்துச் சோதனை தொடர்பாக, அவர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பதற்கு இணங்கிய கென்யாவின் தடகள அணியின் முகாமையாளரான மைக்கல் றொட்டிச் என்பவர், அவரது பணியிலிருந்து மீள அழைக்கப்பட்டுள்ளதாக, கென்யா அறிவித்துள்ளது.

இம்முறை இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளில், ஊக்கமருந்துச் சோதனை தொடர்பாக அதிக கவனம் காணப்பட்டதோடு, கடந்த சில மாதங்களாக, கென்யாவின் ஊக்கமருந்துச் சோதனை தொடர்பாகவும் அதிக கவனம் காணப்பட்டது. பல வீரர்கள், ஊக்கமருந்துப் பாவனை காரணமாகச் சிக்கியிருந்தனர்.

இந்நிலையிலேயே, இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகையும் ஜேர்மனின் ஏ.ஆர்.டி தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய புலனாய்வின்போதே, றொட்டிச் சிக்கியிருந்தார்.

வீரர்களின் பயிற்றுநராகவும் முகவராகவும் நடித்த ஊடகவியலாளர்கள் இதுவரை, கென்யாவின் உத்தியோகபூர்வ ஊக்கமருந்துச் சோதனை அதிகாரிகளிடம் றொட்டிச் அறிமுகப்படுத்தியுள்ளார். அத்தோடு, பயிற்றுநராக நடித்த ஊடகவியலாளரின் வீரர்கள், சோதனைகளில் சிக்குவதிலிருந்து தப்புவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். சோதனைகள் இடம்பெறுவதற்கு முன்னர், ஒவ்வொரு முறையும் சொல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக அவர், 10,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களைக் கோரியுள்ளமை பதிவாகியுள்ளது.

இந்நிலையிலேயே, அவரை நாட்டுக்கு மீள அழைத்துள்ள கென்யா, அவர் மீது விசாரணைகள் நடத்தப்படுமென அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .