Editorial / 2017 நவம்பர் 27 , பி.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளில், விரைவாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின் மாறியுள்ளார்.
நாக்பூரில் இடம்பெற்ற இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில், இலங்கை அணியின் இரண்டாவது இனிங்ஸின் இறுதி விக்கெட்டாக லஹிரு கமகேயின் விக்கெட்டைக் கைப்பற்றியபோதே, டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக இரவிச்சந்திரன் அஷ்வின் மாறினார்.
தனது 54ஆவது டெஸ்ட் போட்டியின்போதே 300 விக்கெட்டுகளை இரவிச்சந்திரன் அஷ்வின் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னர், நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான டெனிஸ் லில்லி தனது 56ஆவது டெஸ்டில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்நிலையில், சுவாரஷ்யமான தரவொன்றாக, டெனிஸ் லில்லிம் நவம்பர் 27ஆம் திகதியன்றே 300ஆவது விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
இதேவேளை, சுழற்பந்துவீச்சாளர்களுள் குறைவான பந்துகளை வீசி 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களுக்குள்ளும் இரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தில் உள்ளார். 15,636 பந்துகளை வீசி இரவிச்சந்திரன் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையில், அடுத்த இடத்திலிருக்கும் அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வோர்ன், 18,501 பந்துகளை வீசி 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை அணியின் இரண்டாவது இனிங்ஸில், டில்ருவான் பெரேராவின் விக்கெட்டைக் கைப்பற்றும்போது, தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக 50 விக்கெட்டுகளை இரவிச்சந்திரன் அஷ்வின் கைப்பற்றினார். இதற்கு முன்னர் ஷேன் வோர்ண், இலங்கையணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவனான முத்தையா முரளிதரன் ஆகியோர் மாத்திரமே இவ்வாறு செய்துள்ளனர்.
இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த இரவிச்சந்திரன் அஷ்வின், 600 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியும் என நம்புவதாகக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .