2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இந்திய அணிக்கு அபார வெற்றி

A.P.Mathan   / 2015 மார்ச் 10 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் இந்திய அணியானது அயர்லாந்து அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றுள்ளது. 

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. துடுப்பாட்டத்துக்குச் சாதகமான ஆடுகளத்தில் அயர்லாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் சிறப்பானதொரு ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர். 

போட்டர்ஃபீல்ட் 67 ஓட்டங்களையும் போல் ஸ்ட்ரிலிங் 42 ஓட்டங்களையும் பெற்றனர். நெய்ல் ஓ ப்ரெய்ன் 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிறப்பாகச் சமாளித்த அயர்லாந்து வீரர்களை இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்கள் தடுமாறவைத்தனர். 

அயர்லாந்து அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றது. இந்தியாவின் மொஹமட் சமி 3 விக்கெட்களையும், அஷ்வின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

அடுத்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷிகர் தவானும் ரோஹித் சர்மாவும் சாதனையுடன்கூடிய இணைப்பாட்டத்தைப் புரிந்தனர். ஆரம்ப விக்கெட்டுக்காக இவர்களிருவரும் 174 ஓட்டங்களைப் பெற்றனர். உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியின் ஆரம்ப விக்கெட்டுக்கான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். ரோஹித் சர்மா 64 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 100 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். விராத் கோலி 44 ஓட்டங்களுடனும், ரஹானே 33 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்து போட்டியை நிறைவு செய்தனர். 

36.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை மாத்திரம் இழந்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. போட்டியின் நாயகனாக ஷிகர் தவான் தெரிவானார். இந்த வெற்றியின் மூலமாக தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளைப் பெற்றிருக்கும் இந்திய அணி, குழுவில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. 

இந்தப் போட்டியில் அயர்லாந்தை 49 ஓவர்களில் ஆட்டமிழக்கச்செய்ததன் மூலம் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் எதிரணியின் சகல விக்கெட்களையும் வீழ்த்திய அணி என்ற சாதனையை இந்திய அணி புரிந்திருக்கின்றமையும் குறிப்பிட்டத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .